Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு நோயின் அறிமுகம்

உலகில் நீரிழிவு நோய்
நீரிழிவு நோய், சலரோகம், டயபிடிஸ் (Diabetes) என பலராலும் கூறப்படும் இந் நோயானது உலகளாவிய ரீதியில் மிக அதிகளவான மக்களை பாதித்துள்ளது. ஆரம்பத்தில் இது பணக்காரர்களின் நோய் என வர்ணிக்கப்பட்ட போதிலும் தற்போது ஏழை பணக்காரர் எனும் எனும் வித்தியாசம் பாராமல் எல்லோரையும் பாதிக்கும் நோயாக உருவெடுத்துள்ளது. 180 மில்லியனிலும் அதிகமான நடுத்தர வயதுடையோர் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 194 மில்லியன் மக்களை நீரிழிவு நோய் பாதித்துள்ளது. 2030 ம் ஆண்டளவில் மொத்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 366 மில்லியனை அடையுமென அண்மைக்கால தரவுகள் வெளிப்படுகின்றன. ஓவ்வொரு பத்து செக்கனிலும் இருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

2007ம் ஆண்டில் இந்தியாவிலே (40.9 மில்லியன்) அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் வாழுகின்றனர் எனவும் அடுத்ததாக சீனா (39.8 மில்லியன்) அதிகளவு நீரிழிவு நோயாளர்களை கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஓவ்வொரு பத்துச் செக்கன்களுக்கு ஒருவர் சலரோகத்தினால் இறக்கின்றார். உலகிலே அதிகளவு இறப்பை வருவிக்கும் நோய்களில் நீரிழிவு நான்காவது இடத்தில் உள்ளது. ஆசியாவிலே 45 மில்லியன் மக்கள் சலரோகத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலே 95% ஆனவர்கள் வகை II நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக சலரோக நோயாளிகளின் எண்ணிக்கையில் 20% ஆகும். வகை II நீரிழிவானது (வேகமான பொருளாதார வளர்ச்சியைக் காட்டும்) நகர்ப் புறங்களிடையே அதிகளவில் காணப்படுகின்றது. இங்கு மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, உடற்பயிற்சியின் அளவு குறைவடைவது மட்டுமல்லாமல் செயற்கை முறையில் பதமாக்கப்பட்ட, நார்ச்சத்து அகற்றப்பட்ட மற்றும் கொழுப்பின் அளவு கூடிய உணவு வகைகளை அதிகளவு உண்பதுவும், உடற்பருமன் அதிகரிப்பிற்கும் மற்றும் வகை II நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் முக்கிய காரணங்களாய் உள்ளன.

இலங்கையில் மற்ற நாடுகளைப் போன்று நீரிழிவு நோயை மதிப்பிடுவதற்கான முறைமைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. எனினும் 2005ம் ஆண்டில் செய்யப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் 14.2% ஆன ஆண்களும் 13.5% ஆன பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இலங்கையில் 2 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன?

உடலினால் குருதியினுள் குளுக்கோசின் அளவை கட்டுப்படுத்த முடியாத நிலையே ‘நீரிழிவு நோய்’ அல்லது ‘டயபிடிஸ்’ எனப்படும். குளுக்கோசானது மாப்பொருள்/மாச்சத்து / காபோவைதரேற்று நிறைந்த உணவுகளில் இருந்து உருவாக்கப்படுகின்றது. அதாவது பாண், சோறு, தானியங்கள், பழங்கள், சில மரக்கறி வகைகள், சீனி மற்றும் தேன் போன்றவை உட்கொள்ளப்பட்டால் அவை சமிபாடு அடைகையில் குளுக்கோசு வெளிவிடப்படுகின்றது. இவ்வாறு வெளிவிடப்பட்ட குளுக்கோசு குடலினால் உறிஞ்சப்பட்டு குருதியினுள் விடப்படுகின்றது. பின்னர் குளுக்கோசு குருதி மூலமாக உடலின் பல பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. குளுக்கோசு பிரதானமான சக்தி முதலாகும். எனவே அது உடலின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். குருதியினுள் காணப்படும் குளுக்கோசானது கலங்களுக்குள் சென்றால் மாத்திரமே சக்தி முதலாக பயன்படுத்த முடியும்.

இவ்வாறு குளுக்கோசு கலங்களினுள் செல்வதற்கு இன்சுலின் எனும் ஹோமோன் அவசியமாகும் எனவே, இன்சுலினின் உதவியினால் கலங்களுக்குள் சென்ற குளுக்கோசு சக்தியாக பயன்படுத்தப்படுகின்றது.

இன்சுலின்

இன்சுலின் ஆனது ஒரு ஹோமோனாகும். இது சதையி எனும் சுரப்பியினால் சுரக்கப்படுகின்றது. குளுக்கோசு குருதியில் அதிகரிக்கும் பொழுது சதையி இன்சுலின் குருதியினுள் வெளிவிடப்படும்.

நீரிழிவு நோய் எவ்வாறு ஏற்படுகின்றது?

சுரக்கப்படும் இன்சுலின் அளவு குறைவதனாலோ அல்லது இன்சுலினின் செயற்பாட்டில்தடை (Insulin resistance) ஏற்படுவதாலோ நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.


நீரிழிவு நோயானது இரு வகைப்படுத்தப்படுகின்றது.

  1. வகை I நீரிழிவு நோய் (Type I Diabetes)
    இது பொதுவாக இளம் பிராயத்தினரிடையே ஏற்படுகின்றது. முன்னர் இன்சுலினில் தங்கியுள்ள நீரிழிவு நோய் என அழைக்கப்பட்டது. (Insulin dependent diabetes mellitus (IDDM)) இங்கு இன்சுலின் தேவையான அளவில் சதையச் சுரப்பியினால் சுரக்கப்படுவதில்லை எனவே நோய் அறிகுறிகள் திடீரெனவும் பாரதூரமாகவும் வெளிக்காட்டப்படும்.
  2. வகை ஐஐ நீரிழிவு நோய் (Type II Diabetes)
    இவ் வகை நோயானது பெரும்பாலும் வயது வந்தவர்களிடமும் மற்றும் உடற்பருமனானவர்களிடமும் ஏற்படுகின்றது. முன்னர் இன்சுலினில் தங்கியிராத நீரிழிவு நோய் என அழைக்கப்பட்டது. (Non – Insulin dependent diabetes mellitus (NIDDM)) இங்கு சதையச் சுரப்பியினால் இன்சுலின் சுரக்கப்படும் போதிலும் அது சாதாரணமாக தொழிற்படமாட்டாது. அதாவது இன்சுலின் செயற்பாட்டில் தடை ஏற்படுவதால் ((Insulin resistance) இவ் வகை நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. இந்த வகையான நீரிழிவு நோயின் அறிகுறிகள் திடீரென வெளிப்படமாட்டாது படிப்படியாக அதிகரித்துச் செல்லும்.

நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாவன
அதிகரித்த குருதிக்குளுக்கோசின் அளவு சில நோய் அறிகுறிகளை காட்டும். ஆவையாவன,

• சிறுநீர் அதிகளவில் வெளியேறுதல்
குருதியில் குளுக்கோசின் அதிகரிப்பானது குறித்த அளவைத் தாண்டும் போது (180mg/dl) குளுக்கோசு சிறுநீரில் வெளியேற்றப்படும் வெளியேறும் குளுக்கோசினூடு நீரும் சிறுநீரில் வெளியேற்றப்படும். வெளியேறும் குளுக்கோசினூடு நீரும் உடலிருந்து வெளியேறுவதால் அதிகளவு சிறுநீர் வெளியேறுகிறது.
• அதிக தாகம்
உடலிலிருந்து அதிகளவான நீர் வெளியேறுவதால் உடலில் நீரின் அளவு குறைவடையும் இதனால் அதிக தாகம் ஏற்படும்.
• அதிக களைப்பு, சோர்வு
உடலில் சக்தியை தொகுப்பதற்கு கலங்களுக்குள் குளுக்கோசு செல்ல வேண்டும். நீரிழிவு நோயில் இச் செயற்பாடு தடைப்படுவதால் / குறைவடைவதால் களைப்பு, சோர்வு என்பன ஏற்படும்.
• நிறைக்குறைவு
உடலில் குளுக்கோசு சக்தி முதலாக பயன்படுவது குறைவடைவதால் உடலில் தசைகளில் காணப்படும் புரதம் உடைக்கப்பட்டு சக்தி முதலாக பயன்படுத்தப்படும் எனவே நிறை குறைவடையும்.
• அதிக பசி
குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரித்த அளவில் காணப்படினும் சக்தி முதலின் அளவு குறைவதால் பசி தூண்டப்படும்.
• தோலில் தொற்றுக்கள் ஏற்படுதல்
நீரிழிவு நோயில் உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவடைவதால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகர்க்கும்.

நீரிழிவு நோயை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்
ஒருவர் நீரிழிவு நோயாளியா இல்லையா என்பதை இலகுவான குருதிச் சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
அவையாவன,

  1. Fasting blood sugar – சில (10) மணித்தியாலங்கள் பட்டினிக்குப் பின்னான குருதிக் குளுக்கோசின் அளவு.
  2. Random blood sugar – எழுந்தமான நேரத்தில் குருதிக் குளுக்கோசின் அளவு.
  3. Post prandial blood sugar – உணவு உண்ட பின் 2 மணித்தியாலத்தின் பின்னான குருதிக் குளுக்கோசின் அளவு.
  4. Glycosylated haemoglobin குளுக்கோசு ஏற்றப்பட்ட ஹீமோகுளோபினின் அளவு.

நீரிழிவு நோயானது குணப்படுத்த முடியாத நோயாகும். எனினும் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் பேணுவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

ப.கலாவேந்தன்

Posted in home, கட்டுரைகள்
« நீரிழிவும் இன்சுலினும்
நீரிழிவு நோயாளியும் உடற்பயிற்சியும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com