குழந்தைகளுக்கு எத்தனை தடவைகள் உணவு வழங்கப்பட வேண்டும் என்பது, குழந்தை உண்ணும் உணவின் சக்தியினளவிலும், கொடுக்கப்படும் உணவில் எவ்வளவை குழந்தை உட்கொள்கின்றது என்பதையும் பொறுத்தும் அமையும். ஒன்று தொடக்கம் இரண்டு தேக்கரண்டியளவு எண்ணெயை உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தும் போது, உணவிலுள்ள சக்தியினளவு அதிகரிக்கும். பொதுவாக மேலதிக ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டு 1 – 2 மாதங்களில் குழந்தை அதற்குப் பழக்கப்பட்டு விடும். பின்வரும் அட்டவணையில் குழந்தைகளின் வயதிற்கேற்ப பொதுவாக வழங்கப்கூடிய மேலதிக உணவுகளும், அளவுகளும் வேளைகளும் தரப்பட்டுள்ளது.
- உணவு தயாரிப்பதற்கு 1 -2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கப்படலாம்.
- உணவு வேளைகளின் பின்னர், கொதித்தாறிய நீர் வழங்கலாம்.
மேலதிக ஆகாரங்களில் அடங்கியிருக்க வேண்டிய போசாக்குகள் எவை?
அனைத்து விதமான போசனைகளையும் பெறுவதற்கு , பலவிதமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவது முக்கியமாகும் எனினும் , ஒரு புதிய உணவை குழந்தைகளுக்கு வழங்குவது முக்கியமாகும். எனினும் ஒரு புதிய உணவை அறிமுகப்படுத்தி அதற்கு பழக்கப்படும் வரை 4 – 5 நாள்கள் கொடுத்த பின்னரே, இன்னொரு உணவை அறிமுகப்படுத்த வேண்டும். புதிதாக ஒரு உணவை அறிமுக்படுத்தும்போது, அரிதாக ஏற்படக்கூடிய ஒவ்வாமையின் அறிகுறிகளான, தொடர்ச்சியான அழுகை தோலில் ஏற்படக்கூடிய சிவப்புத் தடிப்புக்கள், சக்தி வயிற்றோட்டம், இழுப்பு என்பவற்றை அவதானிக்க வேண்டும். அவ்வாறான சமயங்களில் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். ஏழாம் மாதத் தொடக்கத்திலிருந்தே இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும். அவையாவன மீன், நெத்தலி, கோழி இறைச்சி, முட்டை மஞ்சட்கரு, ஈரல், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சோயா, பாசிப்பயறு, கௌபி மற்றும் பேரிச்சம்பழம், மாதுளம்பழம் என்பன வழங்கப்படும். உணவிலுள்ள இரும்புச்சத்து உடலில் நன்றாக உறிஞ்சப்படுவதற்கு விற்றமின் C அதிகமுள்ள தோடம்பழம், எலும்பிச்சை, நெல்லி, வாழைப்பழம், பப்பாசிப்பழம், என்பன வழங்கலாம். ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு பழத்தை மசித்தோ அல்லது வளர்ந்த குழந்தைகளுக்கு துண்டாக வெட்டியோ கொடுக்கலாம்.
விற்றமின் A அதிகமுள்ள உணவுகளான முட்டை மஞ்சட்கரு, மஞ்சள் பூசணிக்காய், கரட், பப்பாசிப்பழம், மாம்பழம், கரும்பச்சை இலை வகைகள், என்ன ஒவ்வொரு நாளும் சிறிதளவாயினும் சேர்க்கப்படவேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் தேவையான அளவு கொழுப்பு உணவுகளும் சேர்க்கப்பட வேண்டும். சமைக்கும் போது தேங்காய்ப்பாலோ அல்லது 1 -2 தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது மரக்கறி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்ப்பது குழந்தைகளுக்கு வழங்கப்படும் மேலதிக ஆகாரத்திலுள்ள சக்தியை அதிகரிக்க உதவும். மாறான சமைத்த உணவுகளுக்கு சிறிதளவு மாஜரின் அல்லது பட்டர் சேர்க்கலாம். வழங்கப்பட வேண்டிய கொழுப்பு உணவுகளின் அளவு பிள்ளையின் நிறையைப் பொறுத்ததாகும். அதிக நிறையுள்ள குழந்தைக்கு சிறிதளவு கொழுப்பும் (நல்லெண்ணெய் போன்ற) நிறைகுறைந்த குழந்தைக்கு அதிகளவு கொழுப்பு உணவுகளும் தேவைப்படலாம். பாலுணவுகளான யோக்கட், தயிர் என்பவற்றை இடைப்பட்ட உணவுகளாக (Snaks) ஏழாம் மாதத்தின் பின்னர் வழங்கலாம். தயிர் கொடுப்பதாயின் அதற்கு சீனியோ, தேனோ சேர்க்கக்கூடாது.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் போது சீனியோ அல்லது உப்போ சேர்க்கக்கூடாது. இயன்றவரைக்கும் வீட்டில் சமைத்த மலிவான சத்தான உணவுகளையே வழங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பக்கெட்டுகளில் அடைத்த சமைத்த உணவுகளை வழங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குரிய உணவுகளில் சிறிய, உருண்டையான, கடினமான துண்டுகளான கடலை, கச்சான், பருப்புக்கள், மிக்சர் போன்ற உணவுகளை கொடுக்ககூடாது. ஏனெனில் அவற்றை குழந்தை உட்கொள்ளும்போது புரையேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக முண்டு.
எட்டுமாதம் முடிந்த பின் உணவுகளை அதிகம் கடைந்து கொடுக்காமல் கையால் மசித்து பிள்ளை ஒரளவு பற்களால் அரைத்து சாப்பிடக்கூடியவாறு வழங்க வேண்டும்.
ஒரு குழந்தையின் வளர்ச்சி வீதம் குறைவாயின், அது உண்ணும் உணவின் சக்தியினளவை அதிகரிப்பதற்காக, பின்வருவனவற்றைச் செய்யலாம்.
- இடைப்பட்ட உணவுகளான பிஸ்கட் பாண் போன்றவற்றுடன் பட்டர் அல்லது மாஜரின் சேர்த்தல்
- பிரதான உணவுகளுடன் சேர்க்கும் எண்ணெயின் அளவைக் கூட்டல்
- இயலுமானால் உணவு வழங்கும் தடவைகளைக் கூட்டல்
குறைந்த பட்சமாக ஒரு நாளைக்கு வழங்கப்பட வேண்டிய உணவுகளின் அளவும், தடவைகளும் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்
குழந்தை வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை.