சிவபூமியாகக் கருதப்பட்ட இலங்கை இன்று பஞ்சமா பாதகங்களின் இருப்பிடமாக மாறிவருவது வருத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆம்! அண்மைய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தரும் உண்மை வெளியாகியுள்ளது. உலகில் அதிக மதுபாவனை உள்ள 4 நாடுகளில் ஒன்றாக நமது இலங்கையும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. 2015ம் ஆண்டில் 93.1 மில்லியன் லீற்றர் மதுபானக் கொள்வனவு இருக்குமெனவும் 2.6 வீதம் வருடாந்த வளர்ச்சியாக இது இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது மட்டுமன்றி 11.2 லீற்றர் இலங்கையின் தனிநபரொருவர் குடிப்பதாகவும் (நானும் நீங்களும் கூட) அவ் ஆய்வு செப்பிச் செல்கின்றது. சிரோசிஸ் (cirrhosis) எனப்படுகின்ற ஈரல்நோய் அதிகமுள்ள நாடுகளில் நம் இலங்கையும் ஒன்று என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
நீண்டகால ஈரற்தாக்கம் ஈரலை அழற்சிக்கு உள்ளாக்குவதுடன் சிரோசிஸ் ஏற்படவும் ஏதுவாகின்றது. சிரோசிஸ் ஏற்பட பல காரணங்கள் இருப்பினும் மதுபானப் பாவனையே முதன்மை வகிக்கின்றது. சிரோசிஸ் என்பது ஈரற் கலங்களின் இறப்பைத் தொடர்ந்து ஈரலின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுவதுடன், ஈரலுக்கான குருதி வழங்கலிலும் ஈரலின் தொழிற்பாடுகளில் இடையூறுகளும் விளைவிக்கப்படுகின்றது.
”ஈரல்”, ”ஈரல்” என்று அடிக்கடி சொல்லுகின்றோமே ”ஈரல்” என்பது என்ன? அதன் தொழில்கள் தான் யாவை?
உடலின் பெரிய உள்ளக அங்கமான ஈரல் வயிற்றறையின் வலது மேற்புறத்தில் காணப்படுகின்றது. அனுசேபம், ஒருசீர்த்திடனிலை, நிர்ப்பீடனம், பல வகைப் பதார்த்தங்களின் தொகுப்பு, அழிப்பு மற்றும் நச்சகற்றல் போன்ற பல்வேறுபட்ட தொழில்களை ஆற்றும் உடலின் ஒரு முக்கிய அங்கம் ஈரலாகும். ஈரலினால் தொகுக்கப்படும் பதார்த்தங்களுக்கு உதாரணங்களாக புரதம், கிளைக்கோஜன், கொலஸ்ரோல், லிப்போ புரோட்டின், பித்தம், ஓமோன்கள், பிறபொருளெதிரிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
நீங்கள் நீண்டகால மதுபாவனையாளரா? உங்கள் ஈரலும் உங்களுக்காகத் தன்னை ஈடுசெய்து தொழிற்பட முயற்சிக்கும். ஒரு கட்டத்தில் அதுவும் ஈடுசெய்ய முடியாத ஒரு கட்டத்தை அடையும். இக் கால இடைவேளையில் உங்கள் உடலில் பல்வேறுபட்ட மாற்றங்களை உங்களால் அவதானிக்க முடியும்.
வலது மேற்பக்க வயிற்றறையில் நோ ஏற்படல், உடல் மஞ்சளாதல்( கண்ணின் வெண்விழி அடங்கலாக) வயிறு வீக்கம், வயிற்றறையில் நீர் தேக்கமடைதல், இரண்டு பக்க கணுக்கால்களிலும் வீக்கம் ஏற்படல், இரத்த வாந்தி, கரு நிற மலம் வெளியேறல். உடற்கடி, கை நடுக்கம் ஏற்படல், மார்பங்கள் பருமனாதல், விரல் நகங்கள் வளைதல் (Clubbing), உடலின் மயிர்கள் கொட்டுதல், அண்மைத் தசைகளின் பருமன் குறைவடைதல், விதைகளின் பருமன் குறைவடைதல், மூளையின் தொழிற்பாடுகளில் மாற்றம் ஏற்படல் போன்றவை நீண்டகால ஈரற் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையைக் காட்ட வல்லன.
மேற்படி அறிகுறிகள் ஏதாவது நீங்கள் அவதானித்திருப்பின் தாமதியாது உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுங்கள். நோயின் தீவிரதை் தன்மை பரிசோதனைகள் வாயிலாக அறியப்பட்டு அதற்கேற்ற வகையில் சிகிச்சைகள் வழங்கப்படும். ஈரல் மாற்று சத்திர சிகிச்சை தகுதியிருப்பின் மேற்கொள்ளப்படலாம். வயிற்றறையில் நீர் தேங்குதல், மூளையின் தொழிற்பாடு மாற்றம் (Hepatic encephalopathy), பிலிருபின் அளவு அதிகரிப்பு, அல்புமின் அளவு குறைவு, புரோத்துரொம்பின் (குருதியுறைதற் காரணி) நேரம் அதிகரிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஈரல் நோயாளியின் வாழ்தகவு எதிர்வு கூறப்படுகின்றது. உதாரணமாக தீவிரமான நிலையில் வயிற்றறை நீர் தேக்கமடைந்தும், மூளைத் தொழிற்பாட்டு மாற்றம் குறிப்பிடத்தக்களவு ஏற்பட்டும், பிலிருபின் >50mg/dl ஆகவும் அல்புமின் < 2.8mg/dl ஆகவும் புரோத்துரொம்பின் நேரம் > 6 செக்கன்களால் நியம மட்டத்தை விட அதிகமாகவும் காணப்படின் அவ் ஈரல் நோயாளியின் ஒரு வருட எதிர்வு கூறப்படக்கூடிய வாழ்தகவு 42 வீதத்திலும் குறைவானதாகும்.
இவ் வகை ஈரல் நோய் உள்ள ஒருவரில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மேலதிகமாக ஈரலின் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், உணவு சமிபாட்டுத் தொகுதியில் குருதிக்கசிவு அல்லது குருதிப் பெருக்கு, ஈரற் புற்றுநோய், வயிற்றறையின் தன்னிச்சையான பக்ரீரியா தொற்று, இலகுவில் தொற்று நோய்களுக்கு ஆளாதல், சிறுநீரகச் செயலிழப்பு, மற்றும் நுரையீரற் பாதிப்பு போன்ற பல சிக்கலான நிலைமைகளும் உருவாக வாய்ப்புண்டு.
மதுபாவனையால் ஏற்பட்ட சிரோசிஸ் உள்ள ஒருவர் மதுவானையை முற்றாக நிறுத்தினால் (Abstinence) 5 வருட வாழ் தகவு வீதம் 90 ஆகவும் தொடர்ந்தால் 60 வீதமாகவும் வீழ்ச்சியடையும். மேலதிக ஈரற் பாதிப்பினால் பீடிக்கப்பட்ட ஒருவரில் 5 வருட வாழ்தகவு வீதம் 35 ஆகின்றது! அத்துடன் இறப்பானது நோய் வாய்ப்பட்டு ஒரு வருடத்தினுள் ஏற்படுகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
மதுபாவனையை முற்றாக நிறுத்துதல் வரவேற்கப்படத்தக்கது. இதற்காக விஷேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எமது யாழ்ப்பாணத்தில் போதனாவைத்தியசாலையின் உளநலப் பரிவு உங்களுக்கான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குகின்றது.
ஈடுசெய்யமுடியாத ஈரற் பாதிப்புக்குள்ளானோர் வைத்தியக் கண்காணிப்புடன் ஓய்வில் இருத்தல் வேண்டும். உயர் புரத மற்றும் விற்றமின் கொண்ட உணவுகளை மூளைச் செயற்பாடு பாதிக்கப்படாதவரை உட்கொள்ள முடியும். உப்பின் அளவை நன்கு குறைத்துக் கொள்ள வேண்டும். அஸ்பிறின், வலிநிவாரணிகள் பாவிப்பதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருத்தலும் அவசியமான ஒன்றாகும்.
வருமுன் காப்போம்.
மதுவைத் தவிர்ப்போம்.
மருத்துவர். தேவரஞசனா புவனேந்திரன்,
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.