Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



மதம் ஒரு மருத்துவப் பெருஞ்சுடர்

எல்லா மதங்களும் மனிதனை உடல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் சுகமும் பலமும் பொருந்தியவனாக ஒரு முழு மனிதனாக வாழ்வதற்கான பாதையைக் காட்டி நிற்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனம் மனிதனின் சுகம் என்றால் என்ன? ஆரோக்கியம் என்றால் என்ன? என்று வரைவிலக்கணப்படுத்தும் பொழுது “அது நோயற்ற நிலை மாத்திரமல்ல அதனுடன் உள சமூக ஆன்மிக நன்னிலையும் சேர்ந்திருக்கும் பொழுதே அது உண்மையான ஆரோக்கியம்” எனத் திட்டவட்டமாக வரையறுத்திருக்கிறது.

இந்த உண்மையான நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் வரையறுத்துச் சொல்வதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மதங்கள் இதனை வலியுறுத்தி இருக்கின்றன. மனிதனை மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டியிருக்கின்றன. மதத்திற்கும் மருத்துவதற்கும் அடிப்படைத் தத்துவங்கள் ஒன்றாகவே இருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

அன்பு, பரிவு ஒருவனுக்கு உண்மையான சுகத்தையும் நலத்தையும் கொடுப்பது என்ற அடிப்படையிலேயே மதமும் மருத்துவமும் ஒன்றுபடுகிறது. இறைவன் அன்பு மயமானவன் என்று சொல்லுவார்கள். மருத்துவம் ஒருவனுக்கு இந்தப் பிறப்பிலே அன்பும், ஆதரவும், சுகமும், நலமும் கொடுப்பதைப் பற்றிச் சிந்திக்கிறது. செயலுருவம் கொடுக்கிறது. ஆனால் மதங்கள் இம்மையிலும் மறுமையிலும் அவனதும் அவனது ஆன்மாவினதும் நலன்பற்றி தெளிவாகச் சொல்லி வழிகாட்டி நிற்கின்றது. மதங்கள் எப்பொழுது தோற்றம் பெற்றன? மருத்துவ முறைகள் எப்பொழுது தோற்றம் பெற்றன? என்ற கேள்விகள் ஆராட்சிக்குரிய விடயங்களாக இருந்து கொண்டிருக்கின்றன.
இவற்றை ஆராய்ந்து பார்க்கும்பொழுது பலபல சுவாரசியமான விடயங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. மதங்கள் மனிதனை மருத்துவ ரீதியில் எவ்வாறு வழிநடத்திச் சென்றன. வழிநடத்திக் கொண்டிருக் கின்றன என்பதை ஆராயும்பொழுது பல அற்புதமான தத்துவங்கள் அடிப்படை எமக்குப் புரியத் தொடங்கும்.

எல்லா மதங்களுமே மனிதனுக்கு ஆரோக்கியமான பாதையையே காட்டி நிற்கின்றன. மதக்கோட்பாடுகள் விஞ்ஞான ரீதியிலே அணுகப்படும் பொழுது அதன் உண்மையான தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படும்பொழுது ஒரு சமூகத்தின் சுகாதார நிலைமேம்படும்.

மனிதன் எப்பொழுது தோன்றினான்? மதங்கள் எப்பொழுது தோற்றம் பெற்றன? மருத்துவ முறைகளும் வைத்தியமும் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டன? என்பது பற்றி மேலோட்டமாகப் பார்ப்போம். மனிதன் இந்தப் பூவுலகில் தோற்றம் பெற்று 50,000 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவங்கள் கி.மு. 3500 வருடங்களுக்கு முன் சிந்துவெளிப் பிரதேசத் திலே தோற்றம் பெற்றிருந்ததாகப் புதைப்பொருள் ஆராய்ச்சிகள் சான்று பகிர்கின்றன. அக்காலப் பகுதியில் மருத்துவப் பொருள்கள், அறுவை மருத்துவம் ஆகியவை அக்கால மக்களால் அறியப்பட்டிருந்தன என்பதற்கான வரலாற்றுச்சான்றுகளும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

கி.மு. 3500 வருடங்களுக்கு முன் அதாவது இற்றைக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்த மருத்துவ முறைகள் எப்பொழுது முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டன என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை. அதேபோல வேறு மதங்களில் அடிப்படைத் தத்துவங்கள் இக்காலத்துக்கு முன்பே தோற்றம் பெற்றிருந்தனவா? என்பதற்கான ஆதாரங்களையும் பெறுவது கடினமானதாகவே இருக்கிறது.

சிந்துவெளிப் பிரதேசத்தில் தோற்றம் பெற்ற இந்து மதக் கருத்துக்கள் ஒரு முகப்படுத்தப்பட்டு அது இந்து மதமாகத் தோற்றம் பெற்றது. கி.மு. 1500 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதி என்று கருதப்படுகிறது. இதனை வேதகாலம் என்று சொல்வார்கள். தற்போது நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் இந்துமதக் கருத்துக்களும் கோட்பாடுகளும் எப்படி வளர்ச்சி கண்டன என்று நோக்குவோமாக இருந்தால் இவை அடிப்படையிலே வேதங்களையும் தொடர்ந்து வந்த உபநிடதங்களையும் குருமார்களின் அறிவுரைகளையும் அத்திபாரமாக வைத்தே வளர்ச்சி கண்டிருக்கின்றன என்பதை அறியக் கூடியதாக இருக்கிறது.

மனிதன் நாகரிகத்திலே வளர்ச்சி பெற்று வந்த இக்காலப் பகுதிகளில் நல்ல பல கோட்பாடுகளுடன் இன்னும் பல மதங்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு தோற்றம் பெற்ற எல்லா மதங்களுமே மனிதனின் உடல் உள ஆன்மிக நன்னிலைக்கான பாதையைக் காட்டி நிற்கின்றன.

மதங்களுக்கும் மருத்துவத்துக்குமான நெருக்கம் எவ்வளவு இறுக்கமானது என்பதை நாம் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இது எமது சமுதாய மேம்பாட்டுக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.
பல கிறிஸ்தவ மத நிறுவனங்களும் இந்துமத நிறுவனங்களும் மருத்துவச் சேவைக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. உளவளத் துணைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் ஆற்றுப்படுத்துகைக்கும் கிறிஸ்தவ அமைப்புக்கள் ஆற்றிவரும் பங்கு அளப்பெரியது. மத அமைப்புக்கள் பொதுச் சேவைகளில் ஈடுபாடு காட்டுவது ஒரு போற்றுதற்குரிய விடயமாகும். பல மதம் சார்ந்த அமைப்புக்கள் வைத்தியசாலைகளையே வழிநடத்தி வருகின்றன என்பது ஒருமகிழ்ச்சியான விடயமாகும்.

மதத்துக்கும் மருத்துவத்துக்குமான நெருக்கம் எப்பொழுது ஏற்பட்டது? இது சம்பந்தமாகப் பண்டைய நூல்களில் என்ன சொல்லப்பட்டிருகிறது என்பதை ஆராயும் பொழுது பல தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆதிகால மருத்துவ முறைகளிலே சித்த மருத்துவமானது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது திராவிடர்களின் மருத்துவ முறையாக வளர்ச்சி பெற்றுவந்திருக்கிறது. இன்றும் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து நிற்கின்ற இந்தச் சித்த மருத்துவமானது எப்படித் தோற்றம் பெற்றது? இதன் அடிப்படைக் கருத்துக்கள் எங்கிருந்து கிடைத்தன? எமது சமய சரித்திர நூல்கள் இது சம்பந்தமாக என்ன சொல்கின்றன என்பதை
நோக்குவோம்.

சித்த மருத்துவத்தின் தத்துவங்கள் ஆரம்பத்தில் இந்து மதத்தின் முழு முதற்கடவுளாகிய சிவனால் சக்தியிடம் கையளிக்கப்பட்டு சக்தி அதனை நந்தியிடம் கொடுத்து நந்தி அதனை சித்தர்களிடம் சேர்ப்பித்ததாகப் பண்டய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தத்துவங் கள் ஆரம்பத்திலே 18 சித்தர்களினால் கையாளப்பட்டிருக்கின்றன.

சித்தர்களிலே முக்கியமானவராக அகத்தியர் இருந்திருக்கிறார். அகத்தியரின் தலைமையிலே தான் இந்தச் சித்த மருத்துவத்துறை முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் எமது சரித்திர, சமய வரலாற்றுநூல்கள் எடுத்துச்சொல்லி இருக்கின்றன.

சித்த மருத்துவத்துறையின் தோற்றம் பற்றிய இந்தக் கருத்துக்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோமா அல்லது நம்புகின்றோமா என்பது முக்கியமல்ல. இது அவசியமும் அல்ல. ஆனால் அக்காலத்தி லிருந்தே மதமும் மருத்துவமும் ஒருங்கிணைந்து செய்பட்டிருக்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

சிவனின் சரிபாதியாக சக்தி இருக்கிறாள். உடலினுடைய ஒவ்வோர் இயக்கத்துக்கும் தொழிற்பாட்டிற்கும் ஏன் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தின் இயக்கத்துக்குமே சத்தியே மூலகாரணமாக இருக்கிறாள் என்று இந்துமதம் சொல்கிறது. அதைத்தான் விஞ்ஞானமும் சொல்கிறது. மனிதனின் அசைவுக்கும் தொழிற்பாட்டுக்கும் சூரிய மண்டலங்களிலுள்ள அனைத்துப் பொருள்களின் அசைவுக்கும் அடிப்படையாக இருப்பது சக்தி. அதாவது (energy) என்று விஞ்ஞானம் வரையறுத்துச்சொல்கிறது.

விஞ்ஞானம் சொல்வதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த அடிப்படைத் தத்துவத்தை மதங்கள் சொல்லியிருக் கின்றன. இதேபோல பல மருத்துவக் கருத்துக்களை மதங்கள் சொல்லியிருக் கின்றன. அவை எந்த மதத்தின் கருத்துக்களாக இருந்தாலும் உள்வாங்கப்பட்டு மனிதனின் சுகாதார மேம்பாட்டுக்காக அவை பயன்படுத்தப்பட்ட வேண்டும். எல்லா மத அமைப்புகளும் மனிதனின் சுகாதார மேம்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

மருத்துவம் ஆயகலைகள் அறுபத்தினான்கில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு இருப்பதை நாம் காணலாம். மதத்தினதும் மருத்துவத்தினதும் அடிப்படை நோக்கம் மனிதனை நல்ல ஆரோக்கியமான பாதையிலே வழிநடத்துவதே. எனவேதான் மதத்தத்து வங்களில் பல அரிய மருத்துவக் கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன.
மருத்துவம் என்பது பொதுவாக இரண்டு பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது. ஒன்று நோய் ஏற்படுவதைத் தடுப்பது. இதனை Preventive Medicine என்று சொல்லுவார்கள். இரண்டாவதாக ஒருவர் நோய்வாய்ப்பட்டுவிட்டால் அவரை சுகப்படுத்துவது. இதனை Curative Medicine என்று சொல்வார்கள். தற்போதைய மருத்துவ உலகு நோய் ஏற்படுவதைத் தடுக்கும் முறைகளிலே அதிதீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. உலக சுகாதார செலவினங்களில் பெரும் பகுதி தற்பொழுது நோய்த்தடுப்பு மருத்துவத்தை நோக்கித் திசை திருப்பப்பட்டிருக்கிறது. ஆனால் இந்துமதம் இந்த நோய்த் தடுப்பு மருத்துவம் சம்பந்தமான தெட்டத் தெளிவான கருத்துக்களை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருந்திருக்கின்றது.

நவீன மருத்துவ முறைப்படி ஒருவர் நோய்வாய்ப்படுவதை தவிர்ப்பதற்காகச் சில அறிவுறுத்தல்களை முன்வைப்பது வழக்கம். அவற்றில் சில முக்கியமான அம்சங்களை நோக்குவோம்.
1. தினமும் ஒழுங்கான உடற்பயிற்சி. இதனைக் காலையில் செய்து கொள்வது சிறந்தது.
2. மாச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைக் குறைத்து புரதச் சத்து மற்றும் நார்த்தன்மையுள்ள உணவுவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல். மேலதிக உணவைத் தவிர்த்தல்.
3. வீட்டுச்சுற்றாடலையும் உடலையும் சுத்தமாக வைத்திருத்தல்.
4. சுத்தமான உடைகளையும் அங்கிகளையும் அணிதல்
5. புகைத்தல், மது அருந்துதல், தகாத பாலியல் தொடர்புகளைத் தவிர்த்தல்.
6. விற்றமின் ‘டி. தொகுப்புக்காகவும் உடற்சுகாதாரத்துக்காகவும் மெல்லிய சூரிய ஒளியில் நடமாடுதல்.
7. ஒழுங்கான சுவாசப் பயிற்சி, மன அமைதிக்கான நடைமுறைகள்போன்றவற்றைப் பின்பற்றுதல்.

இந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்துவந்தால் நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், இருதய நோய்கள், கிருமித் தொற்றுகை மன அழுத்தம், அதிகரித்த கொலஸ்ரோல், நிறை அதிகரிப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்

தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்துத் தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து, கோயிலுக்குச் சென்று கோயிலை 3 தடவை வலம் வந்து, ஆசனங்கள், அட்டாங்கபஞ்சாங்க நமஸ்காரங்கள் செய்து வணங்க
வேண்டும் என்று இந்துமதம் சொல்கிறது. இங்கே உடற்சுத்தம்,உடைச்சுத்தம், உடற்பயிற்சி என்று 3 விடயங்கள் அடங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பஞ்சமா பாதகங்களைத் தவிர்க்கும்படி இந்துமதம் வலியுறுத்திச் சொல்கிறது. இந்த பஞ்சமா பாதகங்களில் கள், காமம் என்பவற்றை அதாவது மது அருந்துதல், தகாத பாலியல் தொடர்புகள் என்பவற்றைத் தவிர்த்துக கொள்ளுமாறு மதங்கள் வலியுறுத்தி இருக்கின்றன. இதனை சரியான முறையில் கடைப்பிடிப்போமாயின் AIDS போன்ற பல கொடிய தொற்று நோய்களிலிருந்தும் ஈரல், நரம்புகள் சம்பந்தமான நோய்களிலிருந்தும் நாம் தப்பித்துக்கொள்ள முடியும். அத்துடன் இவற்றால் ஏற்படும் எத்தனையோ அநாவசிய இறப்புகளையும் தடுத்து நிறுத்த முடியும்.

விரத காலங்களிலே மாப்பொருளை தவிர்த்து பால், பழம் உண்ணும் வழக்கம் அன்றிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறந்த மரபாகும். பால், பழத்தில் வினைத்திறன் கூடிய புரதமும் விற்றமின்களும் நார்ப்பொருளும் அதிகளவில் இருப்பதுடன் இது ஒரு நிறை உணவாகவும் காணப்படுகின்றது. இதன் மகத்துவம் விஞ்ஞான ரீதியாக அறியப்படும் முன்பே மதங்களால் அறியப்பட்டிருக்கின்றன.

சூரிய நமஸ்காரம் எமது வழிபாட்டு முறைகளில் முக்கியமான ஒன்றாகும். இது காலையில் சூரிய ஒளியிலிருந்து சூரியனை நமஸ்காரம் செய்யும் ஒரு முறையாகும். இதனையே மேலைத்தேய நாடுகளிலே ‘சன்பாத் என்று செய்து வருகிறார்கள். இதன்மூலம் பல எலும்பு சம்பந்தமான நோய்களைத் தடுக்கமுடியும்.

தற்பொழுது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டு வரும் விடயங்கள் எதுவித ஆராய்ச்சிகளும் இன்றி அந்தக் கால மதக்கோட்பாடுகளில் சேர்க்கப்பட்டிருப்பது எப்படி? யார் இதைச்செய்தார்கள்?

எல்லா மதங்களின் போதனைகளிலும் மருத்துவம் சம்பந்தமான கருத்துக்கள் மறைந்திருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. விஞ்ஞான மயப்பட்டு வரும் உலக நடைமுறைகளும் மனிதனின் புதிய சிந்தனைகளும் வரவேற்கப்படவேண்டியவை. அதேபோல மதக்கருத்துக்களும் விஞ்ஞான மயப்படுத்தப்படவேண்டும் என்ற ஒரு தேவை எழுந்தி ருக்கிறது. சொல்லப்படும் ஒரு கருத்தை எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் மனம் ஏற்றுக்கொள்ளமாட்டாது. ஏற்றுகொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. காரணம் அப்படிப்பட்ட
மனதுடன்தான் கடவுள் மனிதனைப் படைத்திருக்கின்றார்.

அதாவது எதற்கும் ஆதாரத்தையும், காரணத்தையும், விளக்கத் தையும் தேடும் மூளைதான் மனிதனுக்கு அமையப்பெற்றிருக்கிறது. இதனைத் தான் பகுத்தறிவு என்று சொல்லுவார்கள். எனவே மதக் கருத்துக்கள் மனிதனின் பகுத்தறிவால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் மட்டுமே அவை மனிதனை வழிநடத்தும். இதன் மூலம் மதங்களில் பொதிந்திருக்கும் மருத்துவப் பேரொளி மக்களைச்சென்றடையும்.

கடவுளைப் பக்தியுடன் மனமுருகி, மனம் ஒருமித்து, தியானித்து வழிபடும் முறை அன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல தீமைகள் நீங்கும் நாம் காப்பாற்றப்படுவோம். பல நல்ல விடயங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவை உண்மைதானா என்ற கேள்வியும் பலரது மனங்களிலே எழத்தான் செய்கிறது. ஆனால் இவை உண்மையென ஆராய்ச்சிகள் மூலம் நிருபிக்கப்பட்டு வருகிறது. மனமுருகி, மனம் ஒருமித்து, தியானித்து வணங்குவது என்பது Meditation, Relaxation, சுவாசப்பயிற்சி என்பவற்றின் அடிப்படையில் அடக்கமாகின்றது. இவற்றை ஒழுங்காகச் செய்து வருமாறு நவீன மருத்துவ உலகு மக்களுக்குப் பரிந்துரைத்து நிற்கின்றது.

இதனைத் தினமும் செய்து வந்தால் பல நோய்களின் தீவிரத்தன்மை நீங்கும். அல்லது குறைவடையும். நாம் பல கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றப்படுவோம். மனத்துக்குப் புத்துணர்ச்சியும் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். இதன் மூலம் பல நல்ல காரியங்கள் நிறைவேறும்.

தற்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளின் (pig-offairulo Meditation, Relaxation, outragilb, 3roussolo Luísio போன்றவற்றின் மூலம் பல கொடிய நோய்கள் ஏற்படும் வீதத்தைக் குறைக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கொடிய நோய்களாவன அதிகரித்த குருதி அமுக்கம், மன அழுத்தம், பாரிசவாதம், தலையிடி, மனச்சோர்வு, மாரடைப்பு போன்றவையாகும்.

தியானமுறைக்குக் கடவுளின் உருவை வைத்துத் தான் தியானிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கோயிலில் இருந்துதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நாம் விரும்பிய ஒர் அமைதியான இடத்தில் இருந்து நாம் விருமபிய ஒரு பொருளை மையமாக வைத்து தியானிக்க முடியும். காரணம் கடவுள் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார் என்று மதங்கள் கூறுகின்றன.

எனவே மதவழிபாட்டு முறைகள் மனிதனை உடற்பலமும் ஆன்மிக பலமும் பொருந்தியவனாக ஆரோக்கியமானவனாக வாழ வழிசெய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. மதக் கருத்துக்கள் அனைத்தும் விஞ்ஞான தத்துவங்களுக்கும் நவீன மருத்துவத்துக்கும் முரணானவை என்ற கருத்துக்கு இடமில்லை. எமது இளம் தலைமுறையினரை மதக்கோட்பாடுகளுக்கு மதிப்புக் கொடுப்பவர் களாக அதில் நம்பிக்கை கொண்டவர்களாக வளர்த்தெடுப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாக கடமை ஆகும்.

நோய் ஏற்படுவதைத் தடுக்கும் மார்க்கங்கள் மட்டுமல்ல நோய்களைக் குணமாக்கும் வழிமுறைகளையும் கூட மதங்கள் வரையறுத்துக் கூறி இருக்கின்றன. இந்தக் கருத்துக்கள் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே சைவச் சித்தர்களாலும் ஞானிகளாலும் நோயைக் குணமாக்கும் சில இரசாயனப் பதார்த்தங்களும் கனியுப்புக்களும் உலோகங்களும் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. வேதகாலத்திலே தோன்றிய அதர்வன வேதத்தின் உபவேதங்களில் ஒன்றாக ஆயுர் வேத மருத்துவம் கருதப்படு கிறது. சமஸ்கிருத மொழியிலே எழுதப்பட்டுள்ள இந்த மருத்துவத்தில் பல அரிய மருத்துவக் கருத்துக்கள் காணப்படுவதுடன் நோய்களைக் குணமாக்கும் பல மார்க்கங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

சித்தமருத்துவம் திராவிடர்களின் மருத்துவமாகவும் ஆயுர்வேதம் ஆரியர்களின் மருத்துவ முறையாகவும் வளர்ச்சியடைந்து வந்த பொழுதிலும் இரண்டு மருத்துவ முறைகளுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பண்டைய யுத்தங்களிலே காயமுற்றோருக்கு பல சத்திர சிகிச்சைகள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.இதற்கு அவர்கள் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் இரும்புக் கத்திகளாக இருந்தால் அவற்றிலே ஏற்புவலி போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்துகின்ற கிருமிகள் வளரும் ஆபத்து அதிகமாகக் காணப்பட்டதால் தொற்று நீக்கும் வசதிகளற்ற அந்தக் காலத்திலே புத்திசாதுரியமாகப் பாதுகாப்பான செப்புக்கத்திகளை பாவித்திருக் கிறார்கள் அந்தச்சித்தர்கள். இந்த சத்திரசிகிச்சைகளை நடத்தியவர்கள் உண்மையில் எந்த வைத்திய முறையைக் கடைப்பிடித்தார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு போதுமான சான்றுகள் இல்லை.

அதர்வண வேதத்தின் உபவேதமாகிய ஆயுர்வேத மருத்துவத்தை சில நூல்கள் தமிழர்களின் மருத்துவமாகவும் சித்திரித்திருக்கின்றன. சிலப்பதிகாரத்திலே இளங்கோவடிகள் தமிழ் மருத்துவர்களை ஆயுர்வேதர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்த வரும் யோகாசன பயிற்சிமுறையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் சைவச்சித்தர்களே. எந்த மருத்துவம் சிறந்தது என்பது முக்கியமல்ல மனிதன் சுகப்பட வேண்டும் என்பதே முக்கியமானது. அதேபோல எந்த மதம் சிறந்தது என்பது முக்கியமல்ல மனிதன் நல்வழிப்பட வேண்டும் என்பதே முக்கியமானது. உடல், உள்ளம் ஆகிய இரண்டும் செம்மைப்படுவதற்கு மதம், மருத்துவம் இரண்டும் இரு கண்கள் போல விளங்குகின்றன. மதக்கோட்பாடுகளும் மருத்துவ விஞ்ஞானக் கோட்பாடுகளும் இருவேறு துருவங்கள் என்ற எண்ணம் மாற்றம் பெறவேண்டும்.

மதங்கள் எவ்வாறு மனிதர்களின் பல கொடிய நோய்களை சுகப்படுத்தி வருகின்றன என்பது பற்றியும் இதற்கான விஞ்ஞான அடிப்படை என்ன என்பது பற்றியும் இது சம்பந்தமாகத் தற்போதைய ஆய்வுகள் என்ன கூறுகின்றன என்பது பற்றியும் நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். இவை அனைத்தும் நடுநிலைமையுடன் நோக்கப்பட்டு எமது அன்றாட மருத்துவக் கவனிப்பு முறைகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். மதக்கருத்துக்கள் சாதாரண மனிதனால் புரியக் கூடியவையாகவும் ஏற்றுக்கொள்ளப்படக்
கூடியவையாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மத வழிபாட்டு முறைகளால் மனிதன் உண்மையிலேயே சுகம் பெறுகிறானா? இது சம்பந்தமாக விஞ்ஞானம் என்ன சொல்கிறது?ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன? நவீன மருத்துவம் என்ன சொல்கிறது
என்பதைப் பார்ப்போம்.

ஒருவனுக்கு கடுமையான கஷ்டங்களும் மனத்தாக்கங்களும் மன அழுத்தமும் ஏற்படும்பொழுது அது சம்பந்தமாக இறைவனிடம் முறையிட்டு அழும் மரபு வேதகாலத்திலிருந்தே அதாவது கி.மு. 1500 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. சங்ககாலப் பகுதியிலேயே (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) தோன்றிய திருமுறைகளில் இந்த மரபை நாம் தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

கிறிஸ்தவ மதத்திலும் தமது கஷ்டங்களையும் உள்ளக்கிடக்கைகளையும் இறைவனிடம் முறையிட்டு வழிபடும் மரபு 2000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. ஒருவன் தனது மனச்சுமைகள் அனைத்தையும் இறைவனிடம் பாரப்படுத்தி, பயபக்தியுடன் மனம் விட்டு மனமுருகி வழிபடும்பொழுது பக்தர்களின் மனக்கஷ்டங்கள் நீங்கும். பலநன்மைகள் உண்டாகும். மனம் அமைதி பெறும் என்று மதங்கள் கூறுகின்றன. இது தற்பொழுது ஆராய்ச்சிகள் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த முறையின் ஒரு வடிவம் நவீன மருத்துவ சிகிச்சை முறையிலே உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை (counseling) அல்லது உளவளத்துணை என்று சொல்லுவர்.

உளவளத்துணை (counseling) என்று சொல்லப்படுகின்ற இந்தச் சிகிச்சை முறையின் அடிப்படை என்னவென்று நோக்குவோம். இது ஒருவர் மன அழுத்தத்திற்கு அல்லது மனக்கஷ்டத்திற்கு உட்பட்டு இருக்கும்போது பயன்படுத்தப்படும் ஒருசிகிச்சைமுறையாகும்.

இந்தச் சிகிச்சை முறையிலேயே மனக்கஷ்டத்திற்கும் வேதனைக்கும் உட்பட்டிருப்பவர் தனது மன உணர்வுகளை ஒரு அனுபவஸ்தர்(counselor) ஒருவருடன் அப்படியே முழுமையாகப் பகிர்ந்து கொள்வார்.இதன்பொழுது அவரின் உள்ளக்கிடக்கைகள் அனைத்தும் வெளிப்பட்டுத் தெளிவாக சிந்திக்கக்கூடிய நிலையை அடைந்து மனம் தெளிவுபெறும் தனது பிரச்சினைகளுக்குத் தானாகவே தீர்வுகளைக் கண்டு தீர்மானம் எடுக்கும் நிலைக்கு அவர் வருவார். இந்த சிகிச்சைமுறை உலகளாவிய ரீதியிலே மிகவும் பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இங்கு counselor ஆகப் பணியாற்றுபவர் நோயாளியின் பிரச்சினைகளின் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பார்.

எமது வழிபாட்டு முறையிலேயே அந்த அனுபவஸ்தர் அல்லது counselor இன் ஸ்தானத்திலேயே கடவுள் இருக்கிறார். அவர் பலரினுடைய மனச்சுமையை நீக்குவதற்கு உதவியாக இருக்கிறார்.
நாம் வழிபடும் பொழுது முறையிடும் எமது மனக்குறையினை இறைவன் உன்னிப்பாகக் கிரகித்துக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இதனால் நாம் எமது கஷ்டங்களை இறைவனிடம் பகிர்ந்து கொண்டு தெளிவுபெறுகிறோம்.

அத்துடன் இறைவனும் counselor போன்று தன்னைத் தேடிவரும் அன்பர்களின் மனக்குறைகள் சம்பந்தமான இரகசியத் தன்மையைப் பேணிக்கொள்கிறார்.

மதங்களிலே பல மருத்துவக் கருத்துக்கள் இருந்தும்கூட அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடு மட்டுப்படுத்தப் பட்டதாக இருப்பதற்கு காரணம் என்ன? எமது அடுத்த சந்ததியினருக்கு மத நம்பிக்கைகளும் அதிலிருக்கும் பற்றுறுதியும் குறைவடைந்து செல்வதற்கு காரணம் என்ன?

மதம் சம்பந்தமான நூல்களிலே பல பிழையான தகவல்களும் தற்போதைய காலத்திற்குப் பொருந்தாத பல தகவல்களும் சேர்ந்திருப்பதை இவற்றுக்கு ஒரு காரணமாகக் குறிப்பிடமுடியும். சாதிகள் சம்பந்தமாகவும் மனித உரிமைகள் சம்பந்தமாகவும் விலங்கு உரிமைகள் சம்பந்தமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தகவல்கள் பொதுநீதிக்கு முரணாக இருப்பது போல் தோன்றுகின்றன.

கடவுள் உண்மையானவர், அதிலே எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் சம்பந்தமான விடயங்களை சமயநூல்களாகவும் இலக்கியங்களாகவும் பதித்து வைத்திருப்பவர்கள் மனிதர்களே. மனிதர்கள் தவறு விடுவது இயற்கை. உதாரணத்திற்கு சிறுத்தொண்ட நாயனாரின் கதையை எடுத்துக்கொண்டால் அவர் தனது 5 வயது பிள்ளையை வெட்டி ஒருதுறவிக்கு கறி சமைக்கிறார்.

அந்த பிள்ளையைக் கொல்லும் உரிமையை அவருக்கு யார் கொடுத்தது. மனித உரிமைகள் பற்றியும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியும் பேசப்படும் இந்தக் காலத்தில் இந்தக் கதையை எவரது மனம் ஏற்றுக்கொள்ளும்.
மதங்களில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைக்களைவது பாவச்செயலா? மதக்கருத்துக்களுடன் சிந்தனையைத் துண்டும் புதிய கருத்துக்களைச் சேர்த்துக் கொள்வதும் அதற்கு விஞ்ஞான வடிவம் கொடுப்பதும் தவறான செயலா? இவை சிந்திக்கப்படவேண்டியவிடயங்கள்.

சிந்துவெளியிலே இருந்த வழிபாட்டு முறைகளுக்கும் வேத காலத்து வழிபாட்டு முறைகளுக்கும் இடையிலே பெரும் வேறுபாடுகள் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. உபநிடத காலத்திலே சமயக்கருத்துக்கள் மீள ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன. சங்ககாலத்திலே மதக்கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுப் பல விடயங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எனவே சமயக்கருத்துக்கள் மீள ஒழுங்கமைக்கப்படுவது ஒரு தவறான நடவடிக்கை என்று கருதப்படவேண்டிய அவசியமில்லை எனவே
எமது பண்டைய சமய மருத்துவநூல்களும் அவற்றின் கோட்பாடுகளும் பெரியவர்களினால் மீளாய்வு செய்யப்படவேண்டும் என்பது ஒரு வரலாற்றுத் தேவையாகும்.

எல்லாவற்றிற்கும் முன்பு தோற்றம் பெற்ற சித்த வைத்திய முறையும் ஆயுள்வேத வைத்திய முறையும் வளர்ச்சி பெறமுடியாமல் போனதற்குக் காரணம் என்ன? இந்த வைத்திய முறைகளின் உச்சக் கட்டப் பயன்களை பெறமுடியாமல் போனதற்குக் காரணம் என்ன? நவீன மருத்துவ முறைகளுடன் கரம் கோர்த்துப் புதிய புதிய சாதனைகளைச் செய்யமுடி யாமல் போனதற்குக் காரணம் என்ன?

இதற்கான காரணங்களை வரிசைப்படுத்துவோமாயின்.

1. இந்த வைத்திய முறையிலே சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்களை காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பதற்கு நாம் ஆயத்தமாக இல்லை. ஆனால் நவீன மருத்துவக் கருத்துக்கள் தினந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றன.

2. இந்த வைத்தியமுறைகளை விருத்திசெய்வதற்கான தொடர் ஆராய்ச்சிகளைச் செய்வதற்கும் இவற்றில் இருக்கின்ற நல்ல விடயங்களை மேம்படுத்துவதற்கும் தீய விடயங்களை அகற்றுவதற்கும் புதிய விடயங்களைப் புகுத்துவதற்கும் நாம் முயற்சி செய்ய வில்லை. ஆனால் நவீன மருத்துவ முறைகளிலே மருத்துவ சிகிச்சை முறைகள் ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

3. இந்த வைத்திய முறைகளில் கற்பித்தல், கருத்துப்பரிமாற்றம், விஞ்ஞான விளக்கம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பல அரிய சிகிச்சை முறைகள் சில சந்ததியினருடன் அழிந்துபோயின. அந்தச் சிகிச்சை முறைகளின் தத்துவம் மற்றவர்களுக்குப் போதிக்கப்படவில்லை. ஆனால் நவீன மருத்துவ முறைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் திறம்பட வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழினம் என்று மட்டும் நாம் பெருமை பேசிக்கொண்டு இருப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை. காலத்தின் தேவை கருதி சிலவற்றை நாம் செய்தே ஆகவேண்டும். அதைவிடுத்து கண்களை மூடிக்கொண்டு எமது மருத்துவ முறைகள் தான் சிறந்தன எனக் கூறிக்கொண்டு அவற்றைப் புதிப்பிக்காமல் இருப்பது புத்திசாலித்தனம் ஆகாது.

இதுபோலவே எமது மதம்தான் உலகில் சிறந்த மதம் என்று கூறிக்கொண்டு அவற்றில் இருக்கின்ற அரிய கருத்துக்களை மெருகேற்றவும் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை நீக்கவும் எமக்குத் துணிவு இல்லாமல் போனால் எமது அடுத்த சந்ததி மத நம்பிக்கை அற்றவர்களாக உருவெடுப்பதைத் தடுக்கமுடியாது. அவர்களை நல்வழிப்படுத்துவது கடினமாகும்.

கடவுள் மனிதனுக்குப் பகுத்தறிவைக்கொடுத்தது. அதனைப் பத்திரமாக வைத்திருப்பதற்கு அல்ல. மதக்கருத்துக்களிலும் மருத்துவக் கருத்துக்களிலும் சொல்லப்படுகின்ற விடயங்கள் பற்றி விளக்கம் கேட்பது தெய்வகுற்றமாகாது. பகுத்தறிவைப் பாவிப்பது பாவமாகாது. பண்டைக்காலத்து மதநூல்களிலே பல நோய்நிலைகள் விவரிக்கப்பட்டி ருக்கின்றன. அவற்றுக்கான சிகிச்சை முறைகள் கூடச் சொல்லப்பட்டி ருக்கின்றன. திருமூலர் தனது திருமந்திரத்திலே ஒர் இளம் மனிதனுக்கு மாரடைப்பினால் ஏற்படும் திடீர் மரணத்தை தெளிவாக விவரித்திருக்கிறார்.

“அடைப்பணிவைத்தார்.அடிசிலை உண்டார்
மடக்கொடியாருடன் மந்தணம் உண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப்படுத்தார்கிடந்தொளிந்தாரே”

சுகதேகியாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதன் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போனதை தெளிவாகச் சொல்லி இருக்கிறார் இந்தத் திருமூலர். இவர் உண்மையிலே ஒரு வைத்தியர். அகத்தியரின் தலைமையிலே சித்த மருத்துவத்தை வடிவமைத்த 18 சித்தர்களில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அந்தக் காலப்பகுதியிலே சித்தர்களினால் செய்யப்பட்ட வைத்திய முறைகள் அன்றைய வசதிகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் எடுக்கும் பொழுது சிறந்தவனாக இருந்தன. ஆனால் இன்றைய காலத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டால் அன்று சொல்லப்பட்ட வைத்திய முறைகளை அப்படியே செய்வது
புத்திசாதுரியமாகாது.

நவீன மருத்துவத்துறையிலே நோயை சுகப்படுத்துவதற்கான அடிப்படை தத்துவங்களாக என்ன சொல்லப்பட்டிருக்கின்றன எனப் பார்ப்போமாயின்

1. என்ன நோய் இருக்கிறது என்பதை அறிகுறிகளிலிருந்தும் சோதனைகளில் இருந்தும் அறிந்து கொள்ளுதல்.
2. நோய் ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து கொள்ளுதல்
3. இவை அனைத்தையும் கருத்தில் எடுத்து நோயாளிக்கு பொருத்தமான கிசிச்சை முறைகளைத் தெரிவுசெய்து வழங்குதல். இந்த நவீன மருத்துவத்தின் கிகிச்சை முறையின் தத்துவத்தைப் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் திருவள்ளுவர் தனது திருக்குறளில் ஆணித்தரமாக வலியுறுத்தி,

“நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செயல்”
என்று சொல்லியிருக்கிறார்.

அதாவது நோயை அதன் குணம் குறிகளிலிருந்து அறிந்து அது ஏற்பட்டதற்கான காரணத்தையும் அறிந்து எல்லாவற்றையும் தீர்ப்பதற்கான உபாயங்களையும் அறிந்து மருத்துவம் செய்தல் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இவருக்கு அன்றே இதைச் சொல்லிக் கொடுத்தவர்யார்?

திருமூலர் தனது திருமந்திரத்தில் முழுமையாக மனிதனையே மதத்தின் அத்திபாரமாக வைத்துப்பாடியிருக்கிறார்.

“உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும் காளாமணிவிளக்கே”

ஒருவரின் உடலும் உள்ளமுந்தான் அவனது உண்மையான கோயில். அதனை சிறப்பாகப் பராமரிக்க வேண்டியதே ஒவ்வொருவரினதும் முதற் கடமையாகும். இதனைச் சரிவர செய்துவந்தால் நாம் பல நோய்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றப்படுவோம். ஒருவனுடைய உயிரே அவனின் கடவுள். (சீவன் சிவலிங்கம்) என்று திருமூலர் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருவர் தனது மனச்சாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அது நம்மை கடுமையான நோயாளி ஆக்கிவிடும் என்ற உண்மையை வள்ளுவர் மிகவும் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

“தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சேதன்னைச்சுடும்”

இவ்வாறாகப் பல அரிய மருத்துவக் கருத்துக்களைக் கூறும் மதநூல்களிலிருந்து அதிகூடிய பயன்களை மக்கள் பெற்றுக் கொள்வதற்கு இக்கருத்துக்கள் மேலும் மெருகேற்றப்பட வேண்டும். இந்த நூல்களில் இருக்கும் காலத்துக்கு ஒவ்வொத கருத்துக்களின் முக்கியத்துவம் குறைக்கப்படவேண்டும். மதக் கருத்துக்கள் மக்களின் பகுத்தறிவுக்கு விளங்கக் கூடிய வடிவத்துக்கு மாற்றப்பட வேண்டும். இதன் மூலம் எமது அடுத்த சந்ததியினருக்கு மதங்களில் இருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச்செய்து அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.

சமயப் பெரியார்கள் பலர் மக்களினுடைய நோய்களைக் குணப்படுத்திய வரலாறுகள் பல எம் மதநூல்களிலே காணப்படுகின்றன. உதாரணமாகக் கி.பி.6ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலே வாழ்ந்த திலகவதியார், அப்பர் சுவாமிகளது சூலநோயைக் குணப்படுத்தியிருக்கிறார் சூல நோய் என்றால் என்ன? அது வயிற்றிலே அதாவது இரைப்பையிலும் முன் சிறு குடலிலும் ஏற்படும் புண் அல்லது அழற்சி நிலையாகும். இதனை ஆங்கிலத்தில் கஸ்றைற்றிஸ் (Gastritis) என்று சொல்லுவார்கள். சூலநோயின் போது அப்பர் சுவாமிகளுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் அனைத்தும் கஸ்றைற்றிஸ் நோயின் அறிகுறிகளை ஒத்ததாகவே இருந்தன. அப்பர் சுவாமிகளுக்கு அவர் தனது மனச்சாட்சிகளுக்கு விரோதமாகச் செயற்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டு அது சூலநோயாக உருவெடுத்து. சூல நோய் வந்ததற்கான அடிப்படைக் காரணமான மன அழுத்தத்தை திலகவதியார் உளவளத்துணை மூலமாகப் போக்குகின்றார். அத்துடன் திருநீற்றை ஒழுங்கு விதிக்கமைய அப்பர் சுவாமிகளின் வாயில் போடுகின்றார். தூய்மையான திருநீறு காரத்தன்மையானது. இது வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையைக் குறைத்து வயிற்று நோவைக் குறைக்கவல்லது. இந்த வகையான மருந்துகளைத்தான் நாம் அன்ரசிட்ஸ் என்று சப்பிச் சாப்பிடும் குளிசையாகவும், பாணிமருந்துகளாகவும் பாவித்துக் கொண்டிருக் கின்றோம்.

கடுமையான நோய்வாய்ப்பட்டு ஒருவர் படுக்கையில் இருக்கும் பொழுது பண்ணிசை பாடும் மரபு அல்லது திருமுறைகள் ஒதும் மரபு அன்றுதொட்டு இருந்து வருகின்றது. கிறிஸ்துவ மதத்திலும் இந்த மரபு இருந்துவருகிறது. இந்த இனிமையான அமைதியான இசையானது மனிதனின் உடல் வலியையும் மனவலியையும் குறைக்கவல்லது. அமைதியான இசை ஒருவர் குணப்படும் வீதத்தை அதிகரிக்கிறது எனச் சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. நோயாளிகளின் பராமரிப்பிலே நவீன மருத்துவமுறைகளில் இசையின் பங்கு அதிகரித்துவருகிறது.

மதத்துக்கும் மருத்துவத்துக்கும் இருக்கின்ற நெருக்கம் பற்றிச் சொல்லிக் கொண்டே போகமுடியும். இதனால் மட்டும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. இனி நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதே இன்று முக்கியமானதாகி நிற்கின்றது. சரித்திர காலத்தில் கூட சந்தித்திராத பல சோக வரலாறுகளைச் சுமந்து நொந்துபோன ஒரு நோய் வாய்ப்பட்டுப்போன சமுதாயமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின் றோம். இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளைக் கூடச் சரியான முறையில் செய்யாமல் விட்டுவிட்டோமோ என்ற குற்ற உணர்வு இருந்து கொண்டிருக்கின்றது. எமது சமூகக்கட்டமைப்புக்கள் உருக்குலைந்து போயிருக்கின்றன. எமது கலாசார விழுமியங்கள் சிதைந்து சின்னாபின்னமாகப் போயிருக்கின்றன. மனிதனை மனிதன் மதிக்கும் மனிதத்துவம் கெட்டுப் போயிருக்கின்றது.

தற்போதைய காலகட்டத்திலே அழிவின் விளிம்பில் இருக்கும் எமது கலாசாரம் மொழி, மத நம்பிக்கை என்பற்றைக் காப்பாற்றி ஒர் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கு நாம் என்ன செய்யப் போகின்றோம்?துயரப்பட்டுக் கொண்டிருக்க இது நேரமல்ல.

இத்தனை துயரங்களினூடும் ஒரு மகிழ்ச்சிகரமான விடயம் வெள்ளிடை மலையாக வெளிச்சமாகத் தெரிகிறது. எமது பகுதிகளில் இயங்கும் மத நிறுவனங்களும் கோயில் நிர்வாக சபைகளும் 30 வருட யுத்தத்துக்குப் பின்னரும் தமது கட்டமைப்புக் குன்றாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புகள் பல பொதுச் சேவைகளையும், சுகாதார சேவைகளையும், தமது சமயத் தொண்டுகளுக்கு மேலாகச் செய்துவருகின்றன. இந்த விடயத்தில் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் கூடுதலாகக் காணப்படுகிறது. மக்களின் மன அமைதிக்கான ஆறுதலுக்கான நிலையங்களாக மட்டும் இந்தக் கோயில்களும் மத நிறுவனங்களும் விளங்கவில்லை. மக்களை நல்வழிப்படுத்தி சுகதேகிகளாக வாழும் மார்க்கங்களையும் இவை சொல்லி நிற்கின்றன.

மதமும் மருத்துவமும் வரலாற்றுக் காலத்தில் இருந்ததிலும் பார்க்க இன்னும் பல மடங்கு நெருக்கமாகச் செயற்பட வேண்டிய ஒரு வரலாற்றுத் தேவை.தற்பொழுது எழுந்திருக்கிறது. இதற்குச் செயலுருவம் கொடுக்க நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை சிந்திப்போம்.

இதற்கான சில ஆரம்பப் பொறிமுறைகளை இங்கு முன்வைக்கின்றேன்.

1. ஒவ்வொரு மத நிறுவனங்களும் கோயில் நிர்வாக சபைகளும் தமது பகுதிகளின் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒழுங்கு செய்யலாம். இங்கே பொதுமக்களின் குருதி அமுக்கம் சோதித்தல், குருதியில் உள்ள சீனியின் அளவைச் சோதித்தல் போன்றவற்றையும் செய்ய முடியும். இதற்கான அனுசரணைகளையும் ஆலோசனை களையும் நீரிழிவுச்சிகிச்சைநிலையம் வழங்கத் தயாராக இருக்கிறது. இங்கு இனங்காணப்படும் நோயாளர்களின் சிகிச்சைகளுக்கும் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.

2. மத நிறுவனங்கள் ஒவ்வொன்றும் மருத்துவமனைகளின் ஒவ்வொரு விடுதியின் பராமரிப்புக்களைப் பொறுப்பெடுக்க முடியும். இதன்மூலம் மருத்துவமனைகளில் நோயாளர்களின் வசதிகளை மேம்படுத்தமுடியும். அத்துடன் விடுதிச் சுற்றாடல்களை மனதுக்கு அமைதியை ஏற்படுத்தக் கூடிய வகையில் மாற்றி அமைப்பதற்கு இது உதவியாக இருக்கும். இது தயக்கமின்றி மக்கள் வைத்திய சாலைகளில் தங்கிச் சிகிச்சை பெறுவதை ஊக்குவிப்பதுடன் நோயாளர்கள் சுகப்படும் வீதத்தையும் அதிகரிக்கும்.

3. கலாச்சார சீரழிவுகளினால் எமது மக்கள் பெரும் ஆபத்துக்களைச் சந்தித்து நிற்கிறார்கள். குடிவகைகளுக்கு அடிமையாகுதல், இளம்வயதில் (Teenage) கர்ப்பம் தரித்தல், சட்ட விரோதக் கருச் சிதைவு, தற்கொலை முயற்சிகள், மன அழுத்தம், பாலியல் சம்பந்தமான நோய்களின் பரம்பல் போன்ற பெரும் பிரச்சினை களிலிருந்து மக்களை மீட்க மத அமைப்புக்கள் பெரும் பங்காற்ற முடியும். மக்களுக்கு மனித நேயம் பற்றியும், நற்பண்புகள் பற்றியும், எமது கலாச்சாரத்தின் முக்கியத்துவம் பற்றியும் போதிக்க வேண்டும். சமயச் சொற்பொழிவுகளிலே கை தேர்ந்தவர்கள் பலர் எம் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்த முயற்சிக்குக் கைகொடுப்பார்கள். சமயச் சொற்பொழிவுகளின் போது சொல்லப்படும் கருத்துக்கள் மக்களின் பகுத்தறிவால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய கருத்துக்களாகவும் சரியான கருத்துக்களா கவும் இருந்தால் மட்டுமே அது மக்களைச்சென்றடையும்.

4. கோயில் நிர்வாக சபைகளின் பெரியவர்களும் மத நிறுவனங்களின் பெரியவர்களும் வைத்தியர்களுக்கும் வைத்தியசாலை நிர்வாகங்களுக்கும் ஒர் ஆலோசனைச் சபையாக இயங்க முடியும். பொது மக்களுக்கும் வைத்தியத் துறைக்கும் இடையே ஒரு பாலமாகச் செயற்பட்டு நோயாளர்களின் கவனிப்பை மேம்படுத்துவதற்கு உதவமுடியும்.

மேலைத்தேய நாடுகளின் வைத்தியத் துறையுடன் நாம் எமது வைத்தியத்துறையை ஒப்பிட்டுப் பார்ப்போமாயின் நாம் ஐந்தில் ஒரு பங்கு ஆளணிகளுடனும் ஐந்தில் ஒரு பங்கு வசதிகளுடனும்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அத்துடன் நாம் பராமரித்துக் கொண்டிருக்கும் சமுதாயம் நொந்துபோன ஒரு நோய்வாய்ப்பட்டுப் போன சமுதாயம். இந்த நிலையில் மதநிறுவனங்களின் பேராதரவும் ஊக்கமும் எமக்குக் கிடைக்கப்பெறுமாயின் எமது மருத்துவக் கவனிப்புமுறை பலபடிகள் முன்னேறும் பல சிக்கல்களில் சிக்கியிருக்கும் எமது சமூகம் தலைநிமிரும். எம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் மத நிறுவனங்கள் எமது நீரிழிவுச் சிகிச்சை நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மனச்சோர்வும் மன அழுத்தங்களும் எம்மனதை ஆக்கிரமிக்கும் பொழுது மதநம்பிக்கை எமக்குக் கைகொடுக்கும். நம்பிக்கையினங்கள் எங்கும் தலைவிரித்தாடும் பொழுது மதநம்பிக்கை மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்றும்.

நாம் சோர்ந்துபோக வேண்டியவர்கள் அல்ல. முற்றாக அழிவுற்ற நல்லூர் கந்தசுவாமி கோயில் இன்று புதுப்பொலிவுடன் எழுந்திருக் கவில்லையா? அது போல் எமது சமுதாயமும் உடல் நலத்துடனும் ஆன்மிக பலத்துடனும் மீண்டும் தலைநிமிரும், நம்பிக்கை எமது பேச்சாக மூச்சாக முழுவதுமாக இருக்குமாயின் நாம் எந்த நோய்நிலை களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும். தற்கொலைகளுக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் இனி இங்கு இடமில்லாமல் போகும். எமது மகத்துவம் விழுந்துவிடாமல் இருப்பதில் அல்ல விழும் ஒவ்வொரு தடவையும் வெற்றிகரமாக எழுந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

மத நிறுவனங்கள் பல மருத்துவத்துறையுடன் மேலும் நெருக்கமாகச் செயற்பட ஆர்வமாக இருப்பது ஒரு மகிழ்ச்சிகரமான விடயமாகும். சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒழுங்கு செய்தலும் அதில் பங்கெடுத்தலும், மருத்துவமனைகளின் விடுதிகளில் பராமரிப்பைப் பொறுப்பெடுத்தல், கலாசார சீரழிவுகளுக்கு எதிராகத் தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து எமது இளைய தலைமுறையினரைப் பாதுகாத்தல் எனப் பல விடயங்களில் கோயில் நிர்வாக சபைகள் ஆர்வங்காட்டத் தொடங்கி இருப்பது ஒரு ஆரோக்கியமான மாற்றமாகும்.

எமது சுற்றாடல் அசுத்தமடைவதால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், தொற்றுநோய்கள், புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. அத்துடன் நுளம்புப் பெருக்கத்தால் பல ஆபத்தான நோய்கள் பரப்பப்படுகின்றன. எனவே கோயில் நிர்வாக சபைகள் தமது பகுதிச் சுற்றாடல் பாதுகாப்பில் கூடிய அக்கறை காட்டுதல் விரும்பத்தக்கது. வெறும் காணிகளையும் கோயிற் காணிகளையும் பூங்காவனங்கள் ஆக்குவோம், மரங்கள் நட்டு வளர்ப்போம், கோயில் பெரியவர்களின் வழிநடத்தலில் எம் அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்துவோம். இது மனித ஆரோக்கியத்துக்குப் பல வழிகளிலும் உதவும். மதங்களில் இருக்கும் மருத்துவக் கருத்துக்களையும் சித்தமருத்துவக் கருத்துக்களையும் விஞ்ஞான பூர்வமாக நிரூபிப்பதற்குக் கோயில் நிர்வாக சபைகளில் இருக்கும் இளம் அங்கத்தவர்கள் ஆராய்ச்சிகளைத் தொடங்க முடியும்.

இதற்கான வழிகாட்டல்களையும் நிதி உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான ஆராய்ச்சிகளுக்கு உதவுவதற்கான நிதியம் ஒன்றும் இருக்கிறது. இதனைச் சித்தமருத்துவப் பெரியோர் ஒருவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

பல மத நிறுவனங்கள் யோகாசனப் பயிற்சி வகுப்புக்கள், உளவளத் துணைபோன்ற சேவைகளை செய்து வருகின்றன. இவை இன்னும் முன்னேற்றம் காணுமாக இருந்தால் எமது சமுதாயத்தின் சுகாதார நிலை மேம்பட உதவியாக இருக்கும். 30 வருடகால யுத்தத்தால் ஒப்பீட்டளவில் குறைந்தளவு பாதிப்புக்கு உள்ளானவை மத அமைப்புக்களே. அத்துடன் அமைப்பு ரீதியாகச் சுதந்திரமாக இயங்கக்கூடிய நிலையில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நிறுவனங்களும் மதநிறுவனங்களே.

இந்த அமைப்புக்களுக்கு ஆயகலைகள் அறுபத்துநான்கில் ஒன்றாகிய மருத்துவக்கலைக்கு அதாவது சுகப்படுத்தும் கலைக்கு உதவவேண்டிய ஒரு கட்டாயக் கடமையும் தேவையும் தற்பொழுது எழுந்திருக்கிறது. மருத்துவத்துறைக்கு அல்லது நோயாளிக்கு உதவுதல் அல்லது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பது சரியைத் தொண்டினுள் அடங்கும். இந்த சரியைத் தொண்டுமூலம் முத்தியடைந் தவர்கள் பலர் என இந்துமதம் சொல்கிறது.

5500 வருடங்களுக்கு முன் சிந்துவெளிப்பிரதேசத்தில் ஏற்பட்ட மதத்துக்கும் மருத்துவத்துக்குமான நெருக்கம் இன்னும் இறுக்கம் பெற்றுத் தொடரவேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் சுகாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்தவதுவற்கென புதிதாக ஒரு உண்டியலை வைப்போம். அதில் சேரும் பணத்தை நோய்த் தடுப்பு முறைகளுக்கும். நோயாளர்களின் துயர் துடைப்பதற்கும் பயன்படுத்துவோம். பிறரின் துயர்துடைப்பதன்மூலம் எமது பாவங்களைக் கழுவிக்கொள்வோம்.

ஒருவனுக்கு அன்பையும் பரிவையும் உண்மையான சுகத்தையும் நலத்தையும், கொடுப்பது என்ற அடிப்படையில் மதமும், மருத்துவமும் ஒன்றுபடுகின்றன. இந்த அடிப்படை நோக்கத்தை மதங்களும், மருத்துவத்துறையும் கைகோர்த்துநின்று வெற்றிகொள்வோம்.

டாக்டர் சி.சிவன்சுதன்,
வைத்திய நிபுணர்,
யாழ். போதனா வைத்தியசாலை

Posted in கட்டுரைகள்
« வாழைத்தண்டு பானம்
முருங்கையிலை தேநீர் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com