குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ப சரியான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவு ஊட்டப்படாவிட்டால் குழந்தைகளில் போசனைக் குறைபாடு ஏற்படும். இந்நிலை மந்த போசணை (Malnutrition) எனப்படும். இது மரஸ்மஸ் (Marasmus) குவாசியக்கோர் (Kwashiorkor) என இருவகைப்படும்.
மரஸ்மஸ் (Marasmus) குழந்தையின் பிறந்தநாள் முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் வழங்காது வேறு துணை ஆகாரங்களையும் வழங்குவதினால் மரஸ்மஸ் ஏற்படுகின்றது. இந் நிலைமை ஏற்பட்ட குழந்தைகளில் புரதம், கலோரி ஆகிய ஊட்டச்தத்துக்கள் பெருமளவில் குறைந்து காணப்படும்.
மேற்குறிப்பிட்ட மந்த போசணை நிலை குழந்தைகளுக்கு ஏற்படாது தடுப்பதற்கு வயதுக்கு ஏற்ப உணவூட்டல் முறை பின்பற்றப்படல் வேண்டும். அதாவது குழந்தை பிறந்து 6 மாதங்கள் ( 180 நாட்கள்) வரை தாய்ப்பால் மட்டும் ஊட்டப்பட வேண்டும். 6 மாதம் முடிவடைந்தும் துணை ஆகாரங்கள் ( பூரணப்படுத்தும் உணவுகள்) கட்டாயமாக கொடுக்கத் தொடங்குதல் வேண்டும்.
பூரணப்படுத்தும் உணவு கொடுக்கும் நாள்களும் முறைகளும்
6ம் மாதம் முடிந்து 3 நாள்கள் வரை
- சோறு – நன்கு மசிக்கப்பட்டு தாய்ப்பால் கலந்து கூழ்ப்பதம்
- ஒரு நாளுக்கு ஒரு தடவை மட்டும் 2 – 3 தேக்கரண்டி
- குழந்தையின் தேவையைப் பொறுத்துக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.
- இடையில் தாய்ப்பால் ஊட்டல் அவசியம்.
6ம் மாதம் முடிந்து 4ஆம் நாள் தொடக்கம் 7ம் மாதம் தொடக்கம் 7ம் நாள் வரை
- சோறு, பருப்பு, தாய்ப்பால் சேர்த்து கூழாக்கப்பட்டு ஒரு நாளுக்கு இரு தடவை ( காலை- மாலை) 3 – 4 தேக்கரண்டி
- வாழைப்பழம் நன்கு மசித்து ½ தேக்கரண்டி
- இடையில் தாய்பாலூட்டல் அவசியம்
6ம் மாதம் முடிந்து 8ஆம் நாள் முதல் 7ம் மாதம் முடியும் வரை
- மசித்தசோறு, பருப்பு, மீன், ஈரல் ½ தேக்கரண்டிமாஜரின் அல்லது ½ தேக்கரண்டி நல்லெண்ணெய் காலை, மாலை கொடுத்தல்.
- பப்பாசிப்பழம் அல்லது வாழைப்பழம் நன்கு மசித்து ½ தேக்கரண்டி
- தாய்ப்பால் இடையில் கொடுப்பது முக்கியம்.
7ம் மாதம் முடிந்து 7 நாள்கள் வரை
- மசித்தும், மசியாததுமான பதத்தில் சோறு
- மரக்கறி கரட், சாம்பல் வாழைக்காய், பூசணி
- பச்சை இலைவகை, இவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து அவித்து ½ கப் 2 அல்லது 3 தடவை
- உணவூட்டிய பின் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இடைநேர உணவாக ( காலை 10 மணி)
- உருளைக்கிழங்கு அல்லது வற்றாளை கிழங்கு அவித்து நன்கு மசித்து அவித்த முட்டை மஞ்சள்கரு ½ தேக்கரண்டி தேங்காய்ப்பால் 1 தேக்கரண்டி சேர்த்து அவித்துக்கொடுத்தல்.
- மசித்த பப்பாசிப்பழம் அல்லது வாழைப்பழம் 4 தேக்கரண்டி
- சோறு மரக்கறி இலைவகையுடன் ½ கப் அல்லது கூடவும் 2 தொடக்கம் 3 தடவை கொடுக்கவும். மசித்த பழவகை ½ கப் இடையில் ( காலை 10 மணியளவில்)
- ஜோகட் 6 தேக்கரண்டி, மசித்த பழம் ½ கப், பிஸ்கட் 1 அல்லது பாண் நடுப்பகுதி பிள்ளையின் கையில் கொடுத்தல், உணவின் பின் தாய்ப்பாலூட்டல்.
9ம் மாதம்
மேற்குறிப்பிட்டவற்றுடன் முட்டை வெள்ளைக்கரு, அவித்த பயறு, கௌபி, இடியப்பம், ரொட்டி, தோசை குழந்தைகளுக்கு கையால் சாப்பிடக் கொடுத்தல்.
9ம் மாதம் முதல் 12 மாதம் வரை
- சோறு மரக்கறிவகை, மீன், முட்டை ½ கப் 1 நாளைக்கு 3 முறை
- கொடுக்கும் போது கொடுக்கும் உணவின் பெயர், நிறம் என்பன கூறல்.
- குழந்தை உணவை உண்ண ஊக்கப்படுத்தல் வேண்டும்.
குழந்தைகள் ஒரு வயது முடிவில் வளர்ந்தவர்கள் உண்ணும் உணவுகள் யாவும் உண்ணப் பழகி விடுவர். எனினும் குழந்தைக்கு 2 வயது பூர்த்தியாகும் வரை துணை ஆகாரங்களுடன் தாய்ப்பால் ஊட்டுதல் மிக அவசியமாகும் ஏனெனில்,- குழந்தையின் மனநலம், புத்திக்கூர்மை என்பவற்றை அதிகரிக்கும். வயிற்றோட்டம், சுவாச நோய்கள், தோல் நோய்கள் என்பவற்றைத் தடுக்கும்.
- பற்கள் எலும்பை வலிமை வாய்ந்ததாக்கும், பிற்காலத்தில் நீரிழிவு நோய்ஏற்படவதைக் குறைக்கும் அல்லது தடுக்கும்.
- பால்மா வாங்கும் செலவைக் குறைக்கும்.
உணவூட்டல் தாமதிப்பதால் குழந்தையில் ஏற்படும் சிக்கல்களாவன –
வளர்ச்சி குன்றுதல், போசணைக் குறைபாடு, விற்றமின்கள் இழக்கப்படல், அறிவு விருத்தியடையாமை நோய்த் தொற்றுக்கு உள்ளாதல்
திருமதி.சோ.கருணைலிங்கம்
சிரேஷ்ட தாதிய போதனாசிரியர்
யாழ்.தாதிய பயிற்சிக் கல்லூரி