பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குபவை இயற்கையாக பழுத்து கனிந்த பழங்களை உண்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் இன்பம் தரக்கூடியது. ஆனால் தற்போது பல்வேறுபட்ட காரணங்களுக்காக இரசாயண பதார்த்தங்கள் மூலம் காய்கள் பழுக்கவைக்கப்படுகின்றன. பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் பல சந்தர்ப்பங்களில் வேறுவகை இரசாயண பதார்த்தங்கள் மூலம் நீண்டநாட்களிற்கு அழுகாமல் பாதுகாக்கப்படுகின்றது. இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மூலம் எமக்கு பழங்களின் உண்மையான சுவை கிடைப்பதில்லை அத்துடன் புற்றுநோய் போன்ற நோய்த்தாக்கத்திற்கும் உள்ளாகின்றோம்.
முற்றிய காய்களை பழுக்க வைப்பதற்கு பாரம்பரிய முறைப்படி புனையூட்டல் செய்யப்படுகின்றது. இதன்போது புகையில் உள்ள எதலீன் ஆனது முற்றிய காய்களை பழுக்க செய்கின்றது. அத்துடன் புகையுடன் கூடிய இளஞ்சூடு முற்றிய காய்களில் உள்ள எதிலினை தூண்டி பழுக்கச்செய்கின்றது. எதிலின் ஆனது இயற்கையாகவே முற்றிய காய்கள் பழமாகும் செயலை தூண்டுகின்ற ஒரு ஓமோன் ஆகும்.
செயற்கையாக தயாரிக்கப்பட்ட அங்கிகரிக்கப்பட்ட மருந்துகளை பாவித்து பழுக்க செய்யும் போது முறைப்படிசெய்தல் வேண்டும். அதாவது அதில் குறிப்பிடப்பட்ட அறிவுரையின் படி மூடிய கொள்கலனினுள் முற்றிய காய்களை அடுக்கி குறித்த பதார்த்தத்திலிருந்து எதிலினை தோற்றுவித்து 24 மணித்தியாலங்கள் மூடி வைத்திருப்பதன் மூலமே பழுக்க செய்ய வேண்டும். ஆனால் இம்மருந்துகளானது நேரடியாக முற்றிய மற்றும் முற்றாக காய்களுக்கு அதிகரித்த செறிவில் விசிறப்படுகின்றது அல்லது தோய்க்கப்படுகின்றது. இதனால் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறுகின்றது இதனால் சுவையற்ற கனிகள்கள் கிடைக்கின்றன அத்துடன் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்குவிளைவிக்க கூடியவை. மாம்பழம், வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றன இவ்வாறு பழுக்க வைக்கப்படுகின்றன.
அத்துடன் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் நீண்டநாட்களிற்கு பழுதாகாமல் இருக்க போமலின், காமிமைட் போன்ற இரசாயன பதார்த்தங்கள் பாவிக்கப்படுகின்றன. அப்பிள் பழங்கள் மெழுகு (wax) விசுறுவதன் மூலம் நீண்ட நாட்களிற்கு அழுகாமல் வைக்கப்படுகின்றது. Formalin, Carbide போன்றன அங்கிகரிக்கப்படாதவை இவற்றினால் பல்வேறு தீங்கான விளைவுகள் ஏற்படும். எது எவ்வாறாகினும் நுகர்வோர் கீழ்வரும் மாற்று வழிகளை கையாளலாம்.
- இவ்வாறான இராசாயன பதார்த்தங்கள் விசிறப்பட்ட பழங்களை தவிர்த்து பலாப்பழம், கொய்யாப்பழம், தோடம்பழம், ஆரஞ்சுபழம், அன்னாசி, பேரீச்சம்பழம், ஜம்பு பழம், றம்புட்டான் பழம், வெள்ளரிப்பழம், வத்தகைப்பழம், மங்குஷ்டான் பழம், பாலைப்பழம், விழாம்பழம் போன்றவற்றை எடுக்கலாம்.
- வீட்டில் வாழை, பப்பாசி போன்றவற்றை உற்பத்தி செய்து இயற்கையாக கனிந்த பழங்களை உண்ணலாம்.
- தோட்டங்களிற்கு நேரடியாக சென்று முற்றிய மாங்காய்கள், வாழைக்குலை, பப்பாசி போன்றவற்றை வீட்டில் பழுக்க வைத்து உண்ணலாம்.
- அப்பிள் பழங்களின் தோலை சீவி அகற்றிய பின் உண்ணலாம்.
Dr.இ.பரமேஸ்வரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனாவைத்தியசாலை.
யாழ்ப்பாணம்.