இன்றைய நவீன யுகத்திலே தொழில்நுட்பச் சாதன விருத்தியும், இயந்திரத்தனமான வாழ்க்கை முறையும் மனித ஆரோக்கியத்துக்குச் சவாலாக அமைந்துவிடுகின்றன. அந்த வைகயிலே இன்று வேலை நேரங்கள் போக மீதி நேரங்களில் இணையம், பேஸ்புக், செல்போன் என நேரங்களைக் கழிப்பது அநேகருடைய வழக்கமாகிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு மூளைக்கும் ஏனைய அவயவங்களுக்கும் சற்று ஓய்வைக் கொடுக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்கின்றனர்.
தூக்கமின்மை சம்பந்தமாக மனிதரிடையே காணப்படும் அலட்சியப் போக்கு ஆரோக்கியத்துக்குக் கேடாக அமைந்துவிடுகிறது. இதனை உள மருத்துவவியலாளர்களும், விஞ்ஞானிகளும் நிரூபித்துள்ளனர். மனித உடலானது மூளையின் கட்டளைகளுக்கமையச் செயற்படுகின்றது. மனித உடலினது இயற்கையான தூக்கம், விழிப்புக்கான கட்டுப்பாடு மையம் மூளையில் உள்ளது. இ வழக்கமாகச் செயற்படும் செயற்பாடுகளுக்கமைய ஒவ்வொருவருடையேயும் மாறுபடலாம். இது உடலின் கடிகாரம் எனப்படும். மூளையானது தேவையான அளவு ஓய்வை பெற்றதும், இசைவாக்கத்துக்கு அமைவாக நித்திரை விட்டெழுதலுக்குரிய கட்டளை பிறப்பிக்கப்படும். மனிதனுடைய அத்தியாவசிய தேவையானதும் மிக முக்கியமானதுமான ஒன்று தூக்கம் ஆகும். தூக்கம் சரியாகத் திருப்தியளிக்கப்படாவிடின் சாதாரணமான நாளந்ததச் செயற்பாடுகள் மாறுபடுவதும் உள ரீதியாக வித்தியாசமான தன்மை காணப்படுவதும் நாம் யாவரும் அறிந்த உண்மை. இந்த நிலை தொடர்ந்து செல்லுமாயின் மூளை அதற்கேற்பத் தன்னைப் பழக்கப்படுத்தி உடலியல் செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஹாவார்ட் மற்றும் சாரே பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.
மேலும் உடலியல் கடிகாரச் செயற்பாட்டில் பங்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் உடல் நொதியங்கள், ஓமோன்களினது சுரப்பிலும் வித்தியாசம் ஏற்படுகின்றது. இது உடல் பருமன் அதிகரித்தல், உயர் குருதியமுக்கம், உளநோய் நிலைமைக்கு இட்டுச் செல்லலாம். எமது உடலில் இரவிலேயே கொழுப்புத் தொகுப்பு இடம்பெறுகின்றது. இதற்கு சமிபாட்டுத்தொகுதிக்கு போதுமான அளவு குருதிப் பரிமாற்றம் தேவைப்படுகிறது. உடல் அங்கங்கள் ஒய்வாக இருக்கும் போது இந்தச் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெறும்.
எனவே பகல் நேரங்களில் உடலால் செய்யப்படும் செயற்பாடுகளினால் தசைநார்கள், அவயங்கள் களைப்படைந்து விடுவதால் நிறைந்த போதுமான அளவு ஒய்வை வழங்குவது அவசியம். அந்த வகையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கணினி, தொடுதிரை பார்த்தல் மற்றும் கண்ணால் கூர்ந்து அதிக நேரம் பார்க்கும் செயற்பாடுகளைத் தவிர்த்தல் நல்லது. மேலும் மின்விளக்குகளில் நீல நிற வெளிச்சத்தை ஒளிர விடுதலையும் தவிர்த்தல் நல்லது. மேலும் நித்திரைக்குச் செல்ல முன்னர் தேநீர், கோப்பி போன்றவற்றை உட்கொள்ளக் கூடாது. இவை மூளையைச் சுறுசுறுப்படையைச் செய்து நித்திரையின்மையை ஏற்படுத்திவிடும். மேலும் போதைப் பொருள் பாவனை, மது அருந்துதல் என்பனவும் நாளடைவில் தூக்க மின்மையை ஏற்படுத்தும்.
நல்ல சுகமான தூக்கத்தை ஏற்படுத்த எமது சூழலைச் சரியாக தயார்படுத்த வேண்டும். நல்ல காற்றோட்டமுள்ள பாதுகாப்பான சூழலைத் தெரிவு செய்ய வேண்டும். தாக்கத்தை ஏற்படுத்தும் புறக்காரணிகளைக் குறைக்க வேண்டும் (சத்தம், வெளிச்சம்) இயலுமாயின் நித்திரைக்குச் செல்வதற்கு முன்னர் நன்றாகக் குளிப்பது உடல் நலத்துக்கும், மனச் சுகத்துக்கும் வாய்ப்பளிக்கும். மேலும் நித்திரைக்குச் செல்ல முன்னர் அதிக உணவை உட்கொள்ளல் நல்லதல்ல.
மேலும் மாலை நேரங்களில் உறவினர், நண்பர்களுடன் உறவாடி நேரத்தைச் செலவு செய்தால் மனம் சுதந்திரமடையும். இதனால் சுகமான உறக்கம் கிட்டும், இரவுக்கடமை புரிபவர்கள் தங்கள் வசதிக்கேற்ப நித்திரை நேரத்தை மாற்றியமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். போதுமான தூக்கத்தை பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.
பத்மராசா பத்மநிருபன்.
தாதிய உத்தியோகத்தர். (சத்திர சிகிச்சைப் பிரிவு)
யாழ் போதனா வைத்தியசாலை.
யாழ்ப்பாணம்