சிறுவர்களில் ஏற்படும் பொதுவான நோயாக சிறுநீர்த் தொகுதிச் தொற்றுக் காணப்படுகின்றது. இது பொதுவாக பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. பொதுவாக குடலில் காணப்படும் பக்ரீரியாக்களே காரணமாகின்றது. இவை சிறுநீர் வழியினூடாக மேல் நோக்கிச் சென்று நோயினை விளைவிக்கின்றது.
சிறுநீர்த் தொகுதியினை மேற்பக்க, கீழ்பக்க சிறுநீர்த் தொகுதி என இரண்டுவகையாகப் பிரித்து நோக்கலாம். மேற்பக்க சிறுநீர்த் தொகுதியினுள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்கான் என்பன உள்ளடங்குகின்றன. கீழ்ப்பக்கச் சிறுநீர்தொகுதியினுள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வழி என்பன உள்ளடங்குகின்றன. சிறுநீர்த்தொகுதித் தொற்றுக்களில் பயிலோநெப்ரைற்றிஸ் (Pyelonephritis) என்று அழைக்கப்படும் சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் பாரதூரமானது. இது சிறுவர்களில் ஏற்படும் போது நிரந்தரமான சிறுநீரகப் பாதிப்பிற்கு வழிகோலுகின்றது.
மேலும் சிறுநீா தொகுதித் தொற்றினை இரண்டு வகையாகப் பரித்து நோக்கலாம் ஒன்று சாதரணைமாது, அநேகமானவர்களில் ஏற்படுவது இதனை நுண்ணியிர்கொல்லிகள் ( antibiotics) பாவிப்பதன் மூலம் இலகுவாகக் குணப்படுத்த கூடியது. மற்றயது சிறுநீர்த்தொகுதியின் கட்டமைப்பு அல்லது செயற்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளவர்களில் ஏற்படுவது ஆகும். இது திரும்ப திரும்ப ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.
சிறுநீர்த்தொகுதி தொற்றின் அறிகுறிகள் சிறுவர்களின் வயதிற்கேற்ப வேறுபடலாம். குழந்தைகளில் கடுமையான காய்ச்சல் ( 38oC க்கு மேல்) வாந்தி, உணவில் விருப்பமின்மை, சோர்வடைதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
வளர்ந்த சிறுவகளில் காய்ச்சல், வாந்தி, வயிற்று நோ அல்லது நாரி நோ, சிறுநீர்கழிக்கும் போது நோ அல்லது எரிவு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். போன்ற உணர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சிறுநீர் தொற்று ஏற்படும் சாத்தியக் கூறினை அதிகரிக்கும் காரணிகளாக மலச்சிக்கல், நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காது இருத்தல், தனிநபர் சுகாதாரத்தினை பேணாமை, பம்பஸ்( diapers) ஐ அடிக்கடி மாற்றாது நீண்ட நேரம் பாவித்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
சிறுநீர் தொற்றினை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம். சிறுநீர்த் தொகுதித் தொற்றிற்கு சிகிச்சையாக antibiotic therapy வழங்கப்படுகின்றது. இது 7 நாட்களிற்கு பாவிக்க வேண்டும். அதன் பின்னர் சிறுநீா்தொகுதி தொற்று ஏற்பட்ட அனைத்து சிறுவர்களும் Scan பரிசோதனை ( Ulta sound scan) செய்யும் வரை முற்பாதுகாப்பு மருந்துகள் (Prophylaxis) இரவில் எடுக்க வேண்டும். அதன் பின் ஒவ்வொருவனினதும் நோய்நிலைமை, சிறுநீர் தொகுதியின் கட்டமைப்பு, தொழிற்பாட்டில் உள்ள குறைபாடுகள் என்பவற்றிற்கேற்ப இம் மருந்துகள் தொடர்ந்து பாவிக்க வேண்டும்.
சிறுநீர் தொகுதித் தொற்றினை தவிர்க்கும் வழிமுறைகளாக மலச்சிக்கலைத் தவிர்த்தல், சிறந்த தற்சுகாதரத்தினை பேணுதல், நாளாந்தம் தேவையான அளவு நீரினை உள்ளெடுத்தல், ஒரு தடவை சிறுநீர் கழித்த பின் மீண்டும் உடனடியாக சிறுநீர் கழித்தல்.
எனவே சிறு நீரகத்தொகுதித் தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்த்து நீண்ட கால சிறு நீரகப் பாதிப்பினைத் தவிர்ப்போம்.
Dr. ஷம்பிகா இராரட்ணம்
நீரிழிவு சிகிச்சைப் பிரிவு
யாழ் போதனா வைத்திய சாலை