குளுக்கோமா என்பது கண்களில் பாதிப்பை ஏற்படுத்தி நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்துகின்ற மிக முக்கிய பிரச்சினையாகும். 2010 ம் ஆண்டில் பார்வை இழப்பு ஏற்ப்பட்டவர்களில் 8வீதம் ஆனவர்களில் குளுக்கோமாவே காரணம். பார்வை குறைபாடு ஏற்பட்டவர்களில் 2வீதம் ஆனவர்களில் குளுக்கோமாவே காரணம்.
உலகளாவிய ரீதியில் 1990 தொடக்கம் 2010 வரையான ஆண்டுகளில் குளுக்கோமா நோயாளர்களின் எண்ணிக்கை முன்னையதை விட ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்துகின்ற முக்கிய காரணியாகவும் இருக்கின்றது.
குளுக்கோமா என்பது கண் நரம்பில் ஏற்படுகின்ற பாதிப்பு காரணமாக, கட்கோளத்தின் அழுக்கம் (Intra ocular pressure) அதிகரிப்பதனால் ஏற்படுகின்றது. எனினும் சிலரில் கட்கோள அமுக்கம் சாதரண அளவிலும் காணப்படலாம். குளுக்கோமா வரக்கூடிய சந்தர்ப்பம் கூடியவர்கள்.
- அதிகரித்த வயது ( >40 Years)
- சலரோக நோயாளர்கள்
- குளுக்கோமாவால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை உடையோர்
- குறும்பார்வை குறைபாட்டு நோயாளர்கள்.
- அதிகரித்த கட்கோளஅமுக்கம் உடையோர்
அனேகமாக குளுக்கோமா நோயாளர்கள் ஆரம்ப நிலைியல் இதனைக் கண்டறிவது இல்லை. பொதுவாக இவர்களில் காணப்படக்கூடிய அறிகுறிகளாவன பார்வைபுல வீச்சு குறைவாகக் காணப்படல், தொடர்ச்சியான தலையிடி, சிவந்த விழிகள், பார்வை தெளிவற்றுப் போதல் என்பவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். எனவே குளுக்கோமா ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளவர்கள் இவ்வாறான அறிகுறிகள் காணப்படின் உடனடியாக கண்வைத்தியரை நாடவேண்டும்.
குளுக்கோமாவை தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். எனவே குளுக்கோமாவிற்கு ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நிரந்தர கண் பாதிப்பினை தவிர்த்துக்கொள்ள முடியும்.
Dr. கஜேந்தினி வேலுப்பிள்ளை
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.