காயங்களை நேயமுடன் பராமரிப்போம்
- எமது உடலில் பல்வேறு காரணங்களாலும் காயங்கள் ஏற்படலாம். உராய்தல் மூலம் ஏற்படும் காயங்கள், வெட்டுக்காயங்கள், குத்துக்காயங்கள், கிழிவுக்காயங்கள் போன்றன பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றன.
- இவற்றைத் தவிர மனிதனால் திட்டமிட்டுச் சத்திர சிகிச்சையின் போது காயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதில் முதல் வகைக் காயங்களில் தொற்றுதல் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் மிகவும் அதிகம். ஆனால், சத்திரசிகிச்சையின் போது ஏற்படுத்தப்படும் காயங்களில் தொற்றுதல் ஏற்படு வது மிகவும் அரிது.
- இவ்வாறு தொற்றுதல் ஏற்படுவதற்கு காயங்களில் காணப்படும் இறந்த கலங்கள், காயப்பகுதிக்குப் போதியளவு ஒட்சிசன் கிடைக்காமை, காயம் ஏற்பட்டவரில் காணப்படும் மந்த போசணை போன்றன காரணமாக இருக்கலாம்.
- இவற்றை விட மனிதனின் உடலில் காணப்படும் ஒரு வகை பக்றீரியாவான Staph ylococcus Aureus எமது உடலில் காயம் ஏற்பட்டவுடன் அக்காயத்தினுள் ஊடுருவித்தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
- இவற்றைத் தவிர சுற்றாடலில் காணப்படும் பல்வேறு பக்றீரியாக்களான Eschcri chia, Klebeislla, Entrobacterand Proteus போன்றவையும் தொற்றுதலை ஏற்படுத்தலாம்.
- மேலும் காயம் ஏற்பட்ட பகுதியில் காணப்படும் அந்நியப்பொருட்களும், காயம் ஏற்பட்டவரில் காணப்படும் நோய் எதிர்ப்புச் சக்தியும் காயம் மாறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- இவற்றைத் தவிர காயம் ஏற்பட்டவரின் வயது, மதுபானம் பாவித்தல், நீரிழிவு போன்ற நோய்நிலைமைகளும் காயம் மாறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- ஒருவரது காயத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதற்கு அறிகுறிகளாக காயம் ஏற்பட்ட பகுதி சிவந்து காணப்படுதல், வீக்கம், சூடாகக் காணப்படுதல், தொடும் போது நோ என்பவற்றுடன் காயம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சீழ் போன்றன வெளியேறலாம்.
- தொற்றுக் காயங்கள் எனின் கட்டாயம் ஏற்புத்தடை ஊசிபோட்டுக் கொள்ளுதல் வேண்டும். இவை ஒழுங்கான முறையில் எடுக்கப்படுதல் வேண்டும்.
- காயத்தின் தன்மையைப் பொறுத்து அதனைப் பராமரிக்கும் தன்மையும் வேறுபடும். நாய்க்கடிக் காயங்கள், பாம்புக்கடிக் காயங்கள் எனின் அந்தப்பகுதி ஓடும் நீரினால் சவர்க்காரமிடப் பட்டு நன்றாகக் கழுவப்பட வேண்டும். இயலுமானவரை தொற்றற்ற அணியத்தினால் மூடிய பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்.
- சிறிய வெட்டுக்காயம் தொடக்கம் பெரிய வெட்டுக்காயங்கள் வரை தொற்றற்ற அணியத்தினால் மூடப்பட்டுப் பராமரிக்கப்படுதல் வேண்டும்.
- வைத்திய சாலைகளில் காயங்களின் தன்மையைப் பொறுத்து வெவ்வேறான பராமரிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- சில சமயங்களில் தொற்று நீக்கிகள் பாவிக்கப்பட்டு நன்றாகக் கழுவப்பட்ட பின்னர் காயங்கள் இலகுவில் ஆறுவதற்காகத் தையல் போடவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
- எனவே காயங்கள் பெரியதாயின் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும். இதன்மூலம் தேவையற்ற குருதியிழப்பு ஏற்படுவதையும் தவிர்த்துக்கொள்ளலாம்.
- சத்திர சிகிச்சைக் காயங்கள் தொற்றற்ற முறையில் ஏற்படுத்தப்படுவதனால் அவற்றுக்கு தொற்றுநீக்கிகள் எவையும் இடவேண்டிய தேவையில்லை. சிலசமயங்களில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், (Antibiotic) காயங்கள் இலகுவில் மாறுவதற்காகக் கொடுக்கப்படுகின்றன.
- வீடுகளில் சிலசமயம் ஏற்படுகின்ற எரிகாயங்கள், சுடுநீர் ஆவி மூலமாக ஏற்படுத்தப்படுகின்ற காயங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.சில சமயங்களில் இவ்வகையான காயங்கள் தோலின் மேற்பரப்பில் ஏற்படுத்தப்படுவதனால் நோவு கூடியனவாகக் காணப்படும்.
- எரிகாயங்களில் உடையின் பாகங்கள் அல்லது வேறு பொருள்கள் ஒட்டிக் காணப்படின் அவற்றை வீட்டில் வைத்து அகற்ற முயற்சிக்கக் கூடாது. வைத்தியசாலையில் வைத்து அவை தகுந்தமுறையில் அகற்றப்பட வேண்டும்.
- மேலும் காயம் மாறுவதற்காகப் பொருத்தமற்ற பதார்த்தங்களைப் பயன்படுத்துவது, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப்பாவிப்பது போன்றன சில சமயங்களில் பாதகமான விளைவைஏற்படுத்தலாம்.
- “கழுதைப்புண்ணுக்கு புழுதி மருந்து” என்பது ஆதிகாலத்தில் இருந்து வழங்கிவரும் பழமொழி. சிலர் புழுதி, சாணம், கோப்பி போன்றனவற்றைக் காயங்களை மாற்றப் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் காணப்படுகிறது.இதனால் ஏற்புவலியை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் உட்செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.
- காயங்கள் மாறுதல் உடலில்நடைபெறுகின்ற சாதாரணமான பொறிமுறைகளில் ஒன்று. எமதுஉடலில் காயம் ஏற்பட்டதும் இயற்கையான பல செயற்பாடுகள் தூண்டப்பட்டு குருதி உறை தல், தின்குழியச் செயன்முறை மூலம் உடலில் புகுந்த நுண்ணுயிர்களின் செயற்பாடுகளை இல்லாமல் செய்தல் போன்றன நடைபெறுகிறது.
- இவ்வாறான செயற்பாடுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உமதுஉடலில் காணப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி சிறப்பாகச் செயற்படவேண்டும்.
- இதற்கு எமது உடல் நன்றாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.அழிவடைந்த இழையங்கள் புதுப்பிக்கப்படுவதற்குப் புரதம் நிறைந்த உணவுகள், பொஸ்பரஸ், கல்சியம் என்பவற்றுடன் விற்றமின் C யும் மிகவும் அவசியமானது. எனவே எமது உணவு முறை சீரானதாக அமையுமாயின் காயங்கள் இலகுவில் ஆறிவிடும்.
- இன்றைய சூழலில் விபத்துகள் சர்வ சாதாரணமாகி விட்டன.காயம் ஏற்படுவது என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. காயங்கள் ஏற்பட்டதும் அவற்றைச் சரியான முறையில் கவனிக்காமல் விட்டால் முக்கியமாக நீரிழிவு நோயாளர்களுக்கு இதனால் பெரிய பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புகள் அதிகம். எனவே, காயங்களை ஒழுங்காகக் கவனிப்பதன் மூலம் எமது வாழ்வுக்காலத்தைக் கூட்டுவோம்.
கோ.நந்தகுமார்
விரிவுரையாளர்,
தாதியர் கல்லூரி,
யாழ்ப்பாணம்.
Posted in சிந்தனைக்கு