நாளாந்தம் மருத்துவமனைக்குவருகை நோயாளிகளில் கடற்றொழில் செய்யும் சாதாரண பொதுமக்கள் பின்வரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களுள் சிலர் ஆபத்தான நிலையை அடைவதையும் அவதானிக்க முடிகிறது.
1.சுனையடிப்பு (சுனைநீர் Jelly Fish)
2.மின்னல் தாக்கம்
3.குருதியில் குளுக்கோஸின் அளவு குறைந்த நிலை.
4.உயர்குருதி அமுக்கம்
5.அதிகரித்த மதுப்பாவனை
சுனைநீர்
மீனவர்கள்,ஆழ்கடல் நீச்சல் செய்பவர்கள்,கடற் கரைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் இதன் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
ஜெலிமீன்களின் அமைப்பும் செயற்பாடும்
ஜெலிமீன்கள் கடல் வாழ்விலங்கினத்தைச் சேர்ந்தவை. இவை சில மில்லி மீற்றரில் இருந்து சென்ரி மீற்றர்வரை பருமன் அளவில் வேறுபடும். இவற்றைக் கைக்கண்ணாடியினால் அல்லது நுணுக்குக் காட்டியினால் மட்டுமே பார்க்க முடியும் இதன் உருவம் பல்வேறு படிநிலை மாற்றங்களைக் கண்டுகொள்வதால் நீருடனோ அல்லது பாசியுடனோ சேர்ந்திருக்கும். அவற்றை இனங்காணுதல் கடினம். இதன் காரண மாகவே அழுக்கு நீர் அல்லது சுனை நீர் என்று பெயர் குறிப்பிட்டு அழைக்கின்றனர்.
கடல் அலைகள், சுழி, சுழிகளின் ஒட்சிசன் செறிவு நீரின் வெப்பம், உணவுச் செறிவு என்பன பல்லாயிரக்கணக்கான சிறிய ஜெலிமீன்களை ஒன்று சேர்க்கின்றன. ஜெலிக்கூட்டத்தை உருவாக்குகின்றன. பொதுவாக ஜெலிமீன்கள் கடல் மேற் பரப்புநீரில் காணப்படும். வெளிச்சம் குறைந்த நேரத்தில் இவை இயக்கம் கொண்டிருக்கும். சில வேளைகளில் கடல் அலைகளின் தாக்கத்தால் கடற்கரையிலும் இவை காணப்படலாம். பூரணை தினத்தில் இருந்து 8 தொடக்கம் 10 நாள்களில் இவை அதிகம் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால் அக்காலங்களில் சுனை நீர்தாக்கம் அதிகரித்துக் காணப்படும் ஜெலி மீன்கள் ஒட்சிசன் குறைந்த அயடீன் உப்புச் சேர்ந்த வெப்பமான கடல்நீரில் அதிக காலம் உயிர்வாழும் திறனைக்கொண்டுள்ளன. மேற்படி குடைபோன்ற அமைப்புடைய ஜெலிமீன்களின் அடிப்பகுதியில் Nematocust எனும் பகுதி காணப்படுகிறது. பெரும்பாலான ஜெலிமீன்கள் ஆபத்தற்றவை. எனினும் சிலவகை ஜெலிமீன்கள் மனிதன் அல்லது விலங்குகள் தொடுகையுற்றதும் அவற்றின் Nematocust எனும் பகுதியில் இருந்து வெளியிடப்படும் நச்சுப் பதார்த்தமானது தோலைத் துளைத்து விசத்தை உள்ளீடு செய்கிறது. இதனால் சிலருக்குதோல் எரிவு,தோல்சிவப்புநிறமாக வீங்கிக் காணப்படல் பொதுவாக கை,கால், இடுப்புப் பகுதி மற்றும் ஆணுறுப்பு பகுதிகளில் இவைதாக்கத்தை ஏற்படுத்தலாம். பெரிய ஜெலி மீன்கள் மனிதனைத் தாக்கும் போது அவற்றில் வால்பகுதி தோலில் பதிந்து உடலில் நீண்ட அடையாளங்களை ஏற்படுத்தலாம். சிலருக்கு இந்தத் தோல் பதிப்பையும் தாண்டி வயிற்று நோ வாந்தி, கை கால் விறைப்பு தசை நோ, சுவாசிக்க இயலாமை, மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படலாம். இதன்போது உடனடியாகவே மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
முதலுதவி
ஆழ்கடலில் தாக்கம் ஏற்பட்டு அதிக நேரம் சுவாசிக்க இயலாமை ஏற்படின் பாதிக்கப்பட்டவர் நீரில் மூழ்குவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே பாதிக்கப்பட்டவரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளிப்பவர்கைஉறை அணிவதன்மூலமோ அல்லது ஈரமான கடலுடைகளை அணிவதன்
மூலமோ ஜெலிமீன் தாக்கத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு ஜெலிமீன் பகுதிகள் ஒட்டிக் கொண்டு தொடர்ந்து விசத்தை ஏற்றிய வண்ணம் இருக்கலாம். இதன்போது பாதிக்கப்பட்ட பகுதியைக் கடல் நீரால் சுத்தம் செய்ய வேண்டும். உதாரணமாக கை, கால், இடுப்பு பகுதிகளை சுத்தம் செய்வது சிறப்பானது. ஸ்பிறிற் மதுபானங்களால் கழுவுதல் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இவை பாதிப்புக்களை மேலும் அதிகரிக்க செய்யும். சுனை நீரின் பாதிப்பு அதிகம் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மருத்துவமனையில் நோயாளிக்குத் தேவையான ஒட்சிசன், அதீத ஒவ்வாமைக்குரிய மருந்துகள் தோல்கடிக்கான மருந்துகள் வழங்கப்படும் மேற்படி நோயாளியை 24 தொடக்கம் 48 மணித்தியாலங்கள் அவதானத்தில் வைத்திருக்க வேண்டும்.
கடலுக்கு செல்பவர்கள் பழக்கமில்லாத தாவரங்களையோ அல்லது விலங்குகளையோ கையுறை அணியாமல் கையாள்வதைத்தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிறுவர்கள், முதியவர்கள்.உடலின் பெரும்பகுதியில் ஜெலிமீன்களின் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் உடனடியாகவே மருத்துவ உதவியை நாட வேண்டும். ஜெலிமீன் விசத்திற்கு உடனடியாக மருத்துவசிகிச்சை வழங்கப்படாவிடின் மாறாததோல் புண்கள், சிறுநீரகம் செயல் இழந்து போதல், சுவாசச் செயலிழப்பு மற்றும் மரணம் சம்பவித்தல் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.
மின்னல் தாக்கம்
கடற்றொழில் செய்பவர்களுக்கு மின்னல் தாக்கம் ஏற்படும் போது ஒரு மில்லி செக்கனுக்குள் பத்து மில்லியன் வேல்ட் வலுவுள்ள மின்சாரம் உடலினுள் சென்று வெளியேறும். இதனால் இதயத் துடிப்பு நின்றுவிடும் நிலை ஏற்படும். மூச்சுத் திணறல் ஏற்படும். இந்தச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவரை கிடையாக மல்லாந்த நிலையில் படுக்க வைத்து நெஞ்சுப் பகுதியில் இடது பக்கம் இதயப் பகு திக்குமேல் இரு உள்ளங்கைகளையும் வைத்து நெஞ்சுப் பகுதியை ஆழமாக அழுத்துவதன் மூலம் தேவைப்படின் செயற்கை சுவாசமும் வழங்கி பாதிக்கப்பட்டவரை உயிர்பிழைக்க வைக்க முடியும்.
எனவே மின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இந்தச் சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சையாகும். அத்துடன் மின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவரை தொடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. எவருக்கும் மின்சாரமும் பரவாது.
மின்னல் தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவரின் மின்னோட்டம் உட்செல்லும் தலைப்பகுதியும் வெளிச்செல்லும் கால்ப்பகுதியும் பாதிப்புக் குள்ளாகும். சில சமயம் தலை, கால்பகுதியில் எரிவு நிலை காணப்படும். அத்துடன் சிலருக்கு காதுகேளாமை, பார்வை இழப்பு எலும்பு உடைதலும் காணப்படும். எனவே மின்னல் தாக்குதல் நிகழும்போது கீழே குனிந்து உங்கள் முழங்கால்களுக்கு இடையில் தலையை நுழைத்தவாறு அமரவேண்டும் அத்துடன்கைபேசி குடை போன்றவற்றைப் பாவிப்பதைத் தவிர்க்கவும் பாதிக்கப் பட்டவரின் நாடித்துடிப்பையும் அவதானிக்கவும்
குருதியில் குளுக்கோசின் அளவு (சீனிச்சத்து) குறைவடையும் நிலை
உணவு அருந்திய பின்பு கடற்றொழிலுக்குச் சென்றால் அதிக நேரம் சுழியோட முடியாது. சோம்பல், உடற் சோர்வுநித்திரை போன்றவற்றைத் தவிர்ப்பதற்கு வெறுவயிற்றுடன் செல்வதால் பொதுவாக குருதி குளுக்கோசின் அளவு குறைவடையும் நிலை ஏற்படுகின்றது.
கடலில் நீந்துதல், சுழியோடுதல் போன்ற செயல்நிலைகளின் போது அதிக கலோரி வெளியேறுவதாலும் குருதியில் உள்ள குளுககோசின் அளவு குறைவடைகிறது. எனவே கடற்றொழிலுக்குச் செல்பவர்கள் உணவை உண்ணாவிட்டாலும் இனிப்புச் செறிவு கூடிய தேநீர், பானங்களை எடுத்தல் நன்று. தொழிலுக்குச் செல்லும் போது தங்களுடன் எடுத்துச்செல்வதும் நல்லது கடற்றொழிலில் ஈடுபடும் போது மயக்க நிலை ஏற்படின் முதலுதவி யாக குளுக்கோசினைக் கொடுத்தால் நன்று உடலில் குளுக்கோஸின் அளவு மிகவும் குறையும் போது நினைவு இழக்கும் நிலை ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதும் உண்டு.
உயர்குருதி அழுத்தம்
உயர்குருதியழுக்கம் உடையவர்கள் கடற்றொழில் செய்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவர் வழங்கும் மருந்துகளை சீரான முறையில் பயன்படுத்த வேண்டும். இவர்கள் மருந்துகளை எடுக்காவிடின் தலைவலி, சிலருக்கு தலையின் பின்புறம்வலி, தலைசுற்றுதல், அம்மல நிலை, போலிக்காதொலி, காதுகளில் ரீங்காரம் அல்லது இரைதல் போன்ற உணர்வு மாறிய கண்பார்வை போன்ற பல குணம் குறிகள் காணப்படலாம். இரவில் கடற்றொழில் செய்பவராக இருப்பின் பகலில் போதியளவு ஓய்வு எடுக்க வேண்டும். அதிக நேரம் கடலில் நிற்பவராக இருப்பின் குறிப்பிட்ட நேரத்திற்குரிய மருந்தினையாவது காற்றுப்புகாத சிறிய போத்தல்களில் இறுக்கமாக மூடிப்படகுகளில் தங்களுடன் எடுத்துச் செல்லலாம்.
தொய்வு நோய்
கூடிய வேலைப்பளு தொய்வு நேர்யை அதிகரிக்கும். அத்துடன் கடற்றொழில் செய்பவர்களுக்கு குளிரின் தாக்கமும் தொய்வு நோயை அதிகப்படுத்தும். இதன் தாக்கத்தை அதிகரிக்க விடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு சில மருந்துகள் ஆவிநிலை வடிவில் உள்ளன. அவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தலாம். நோய் நிலையைப் பொறுத்து மருத்துவர் குறிப்பிட்ட அளவில் ஆவிநிலை மருந்துகளை பரிந்துரை செய்வார். மேற்படி புனை மருந்தானது குருதியில் கலக்காமல் நேரடியாக நுரையீரலுக்கு கிடைப்பதால் அவற்றின் பக்கவிளைவுகள் குறைவதோடு ஆஸ்த்துமாவை கட்டுப்படுத்தும் தன்மையும் அதிகமாகிறது.
படகுகளில் கடற்றொழிலுக்கு செல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மேற்படி புகைப்பிடிக்கும் ஆவிநிலை சாதனங்களைக் கொண்டுசெல்லுதல் நல்லது. அத்துடன் குளிரின் தாக்கத்தைக் குறைப்பதோடு தொப்பி அணிதல், பீடி சிகரொட் புகைத்தல் செயற்பாடுகளைக் குறைத்தல், ஒவ்வாத உணவு வகைகளை உண்பதைத் தவிர்த்தல் போன்ற செயல்நிலைகளின் ஊடே கடற்றொழில் செய்பவர்களுக்கு ஏற்படும் தொய்வு நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
அதிகரித்த மதுப் பாவனை
குறிப்பிட்டளவு கடற்றொழிலாளர்கள் தமது வேலைக்களைப்பைப் போக்குதல் என்ற காரண காரிய வெளிப்பாட்டை கூறி மதுசாரத்தை உபயோகிக்கின்றனர். ஆனால் இது எல்லையை மீறி அதிகரித்த மதுப் பாவனையாக மாற்றங் கண்டு மதுவுக்கு அடிமையாகும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மது அருந்தியதும் சிந்தாமல்சிதறாமல் அனைத்தும் குருதியில் கலக்கிறது. உடலில் உள்ள ஏனைய கலங்களை விட மூளையில் உள்ள நரம்புக்கு ஆறு அல்லது ஏழு மடங்கான வீரியத் தோடு குருதி வழியே கலந்துவிடுகிறது. இதனால் மது அருந்தியதும் முதலாவதாக பாதிக்கப்படுவது மூளையில் உள்ள நரம்புத் தொகுதி ஆகும்.
மூளையின் சமநிலை பாதிக்கப்படுவதால் மூளைக்கும் தசைக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் உணர்வுகள் குறைவடைவதால் கடற்றொழிலில் நீந்துதலில் சிரமம், மூச்சுத் திணறல், கண்பார்வை மங்குதல் தெளிவற்ற பார்வை வெளி என்பன ஏற்படும்.
மதுசாரத்தை எமது ஈரலானது அனுசேபத்தின் மூலம் தண்ணிராகவும்,காபனீரொக்சைட்டாகவும் மாற்றி உடலில் இருந்து வெளியேற்றினாலும் மேற்படி மாற்றம் நடைபெறும். இதன்போது அல்டிகைட் மற்றும் அசற்றல்டிகைட் போன்றன தோற்றம் பெறுவதுடன் ஈரலில் உள்ள கலங்களை அழிக்கின்றன.
ச.சுதாகரன்
தரதிய உத்தியோகத்தர்.
போதனாமருத்துவமனை
யாழ்ப்பாணம்