பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு கொட்டைகளை சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று “நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை”யில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்துள்ளன.
தினமும் ஒரு கையளவு கொட்டைகளை சாப்பிடுவதால், எந்த ஒரு காரணத்தாலும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.
கொட்டைகளை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக சற்று கூடுதலாக உடல் நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் — இவையெல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.