ஒரு குழந்தை 2500 கிராமிலும் குறைவான எடையுடன் பிறக்கும் போது அக்குழந்தை பிறப்பு நிறை குறைவடைந்த (Law birth weight) குழந்தை என அழைக்கப்படும். அதை ஒரு சிறிய குழந்தை எனவும் கூறலாம்.
பிரதானமாக உரிய காலத்துக்கு முன் குழந்தை பிறப்பதாலோ அல்லது கர்ப்பத்திலேயே நிறைகுறைந்த சிசுவாக வளர்வதாலோ பிறப்பு நிறை குறைந்த குழந்தை பிறக்கலாம். பிறப்பு நிறை குறைந்த குழந்தைக்கு விஷேடமாக மிகவும் நிறைகுறைந்த குழந்தைக்கு அநேக பிரச்சினைகள் ஏற்படலாம். அதன் காரணமாக அவர்களை பெரும்பாலும் குழந்தைகள் விஷேட கவனிப்புப் பிரிவில் குறிப்பிட்ட காலத்துக்கு வைத்திருந்து பராமரிக்க நேரிடும். ஒவ்வொரு தாய்மாருக்கும் நிறை குறைந்த குழந்தை பிறக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் அதற்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கான பராமரிப்புக்கள் பற்றியும் விளங்கப்படுத்த வேண்டும்.
இலங்கையில் சராசரியாக 100 குழந்தைகளில் 11 குழந்தைகள் நிறைகுறைவாகப் பிறக்கிறார்கள். அநேகமான சிசு மரணங்கள் பிறப்பு நிறை குறைந்த குழந்தைகளிலே ஏற்படுகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அதிநவீன சிகிச்சை முறைகளால் 500 கிராமிற்கு மேற்பட்ட குழந்தைகளும் உயிர்பிழைக்கின்றன. எமது நாட்டில் 1000 கிராமிற்கு மேற்பட்ட குழந்தைகளே உயிர் வாழ்வதற்கு பெரும்பாலும் வசதிகள் உண்டு.
இனி பிறப்பு நிறை குறைந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பார்ப்போம்
1. வினைத்திறனுடன் பாலருந்த முடியாமை
இதனால் பிள்ளைக்கு தாய்ப்பாலை கிண்ணம் மூலமாகவோ, கரண்டி மூலமாகவோ அல்லது குழாய் மூலமாகவோ பருக்க வேண்டி ஏற்படும். போதியளவு பால் அருந்தாத குழந்தைகளுக்கு குருதியில் சீனிச்சத்து குறைவடைந்து வலிப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே ஒரு சிறிய குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்கச் சிரமப்படின் உடனடி வைத்திய ஆலோசனை அவசியம்.
2. உடல் வெப்பநிலையை பேண முடியாத நிலை.
விசேடமாக மிகக் குறைந்த பிறப்பு நிறையுடைய ( 1500 கிராமிலும் குறைவான) குழந்தைகளை அவர்களின் உடல்வெப்ப நிலையை பேணுவதற்காக, வெப்பம் உள்ள கண்ணாடிப் பெட்டிகளில் சிலகாலம் வைத்திருக்க நேரிடும். மேலும் ஒரளவு நல்ல நிறையுள்ள ( 1500 கிராம் தொடக்கம் 2500 கிராம்) குழந்தைகளையும் சூழலின் வெப்பநிலை குறைவாயின் தொப்பியுடன் உடல், கால், கைகளை மூடக்கூடியவாறான தடிப்பான உடைகளை அணிவிக்க வேண்டும்.
3. இலகுவில் கிருமித் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை
சிறிய குழந்தைகளில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகக் காணப்படும். அதேபோல் சூழலிலிருந்து விஷேடமாக கை கழுவாமல் பிள்ளையை பல பேர் பல தடவை கையாளும் போது இலகுவில் கிருமித் தொற்று ஏற்படலாம். அதனால் தான் இயன்றவரைக்கும் குழந்தையை தாய் மட்டுமே பராமரிக்க ஆலோசனை வழங்கப்படுகின்றது. மேலும் மிகவும் நல்ல முறையில் தூய்மையையும் தனிநபர் சுகாதாரத்தையும் பேண வேண்டும்.
4. உடல் வளர்ச்சி வீதமும், உடல் நிறை அதிகரிப்பு வீதமும் குறைவாகக் காணப்படல்
சாதாரண நிறையுடன் பிறந்த குழந்தையைவிட நிறைகுறைந்த குழந்தைக்கு அதன் வளர்ச்சிக்கு அதிகளவு போசனை தேவை. அதனைப் பூர்த்திசெய்யுமளவுக்கு பிள்ளை பாலருந்தாவிடத்து உடல்நிறை அதிகரிப்பு வீதம் குறைவடையலாம். எனவேதான் நிறைகுறைந்த குழந்தைக்கு மேலதிக உதவிகள் பாலூட்டலுக்குத் தேவை. பிரதானமாக தாய்ப்பாலை எடுத்து கிண்ணம் மூலம் ஊட்டுவதற்கு தாதியர்கள், தாய்க்குப் பயிற்றுவிப்பார்கள். மேலும் உடல்நிறை அதிகரிப்பு வீதத்தை அவதானிப்பதற்காக அடிக்கடி குழந்தைகளை் சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுவரப்பட் வேண்டி ஏற்படலாம்.
5. பிறந்து சில காலங்களின் பின்னர் குருதிச் சோகை
எலும்புகளின் வளர்ச்சிக் குறைவு போன்றவை ஏற்படவும் வாய்ப்புண்டு. இவற்றைத் தவிர்ப்பதற்காக விற்றமின், இரும்புச்சத்து, கல்சியம், பொசுபரசு அங்கிய மருந்துகளை நிறைகுறைந்த குழந்தைக்குத் தினமும் வழங்க வேண்டும்.
6. மூளையிலும், கண்களிலும் பாதிப்புகள் ஏற்படத்தக்க வாய்ப்புக்கள் உண்டு.
மிகவும் நிறை குறைந்த குழந்தைகளுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்க வேண்டியிருப்பின், இந்த நிலைமைகள் ஏற்படலாம். அதற்காக மூளைக்கான ஸ்கானும் (cusscan) கண்வைத்திய சோதனையும் அடிக்கடி மேற்கொள்ளவேண்டி ஏற்படுவதுடன், சிகிச்சையும் வழங்கவேண்டி ஏற்படலாம். தகுந்த சிகிச்சை பெறாவிடின் மூளை வளர்ச்சி குறைந்த பிள்ளையாகவோ அல்லது கண்பார்வை குறைந்த பிள்ளையாகவோ, நிறை குறைந்த பிள்ளைகள் வளர வேண்டி ஏற்படலாம்.
7. குழந்தை வளர்ந்து வரும் காலங்களில் சுவாசத்தொகுதி நோய்கள் ( சளி, இழுப்பு) வயிற்றோட்டம் போன்ற நோய்கள் சாதாரண பிறப்பு நிறை உள்ள குழந்தையை விட பிறப்பு நிறை குறைவான குழந்தைகளில் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே தான் முறையான தனிநபர் சுகாதாரத்தையும், தகுந்த போசாக்கையும், உரிய காலத்தில் தடுப்பு மருந்தேற்றலையும் மேற்கொள்ளவேண்டும்.
மேற்கூறியவற்றைவிட மேலும் சில பிரச்சினைகள் அதிகமாக ஏற்படக்கூடிய நிலைமைகள் ஒரு பிறப்பு நிறை குறைந்த குழந்தைக்கு இருப்பினும் தகுந்த பராமரிப்பின் மூலமும் சிகிச்சை மூலமும் அவற்றை தவிர்த்துக்கொள்ளலாம். இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கான விசேட பராமரிப்புக்கு அதிக வசதிகள் வைத்தியசாலைகளில் செய்யப்பட வேண்டும் என அனைவராலும் வலியுறுத்தப்படுகின்றது. அதன் மூலம் சிசு மரண வீதத்தையும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் குறைக்க முடியும்.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.