வைத்தியசாலையில் தொற்றும் நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல்
வைத்தியசாலையில் பல்வேறு வகையான நோயுடைய நோயாளிகள் இருப்பதனால் பல தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் தங்களைத் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாப்புப் பெறுவது எப்படி?
- வைத்தியசாலையில் தங்கியிருக்கும் நாட்களை இயன்றவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.
- தொற்று நோயுடைய வேறு நோயாளிகளுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக: சுவாசத்தொற்றுடைய நோயாளிகளை (TB)
- கைகளைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் சரியான முறையில் கழுவிக் கொள்ள வேண்டும்.
- சாப்பாட்டுக்கு முன்
- மருந்துவில்லைகளை உட்கொள்ள முன்னர்.
- மலங்கழித்த பின்னர்
- வேறு நோயாளிகளைக் கையாண்ட பின்னர்
ஏனெனில், எமது கைகளின் மூலமாக ஏராளமான நுண்ணங்கிகள் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கோ அல்லது வேறு ஒருவரிடமிருந்து எமக்கோ தொற்றமுடியும். கைகளைக் கழுவும் போது எமது புறங்கைகளுக்கும், விரல் மற்றும் நக இடுக்குகளுக்கும் சவற்காரம் இட்டுக்கொள்ளவேண்டும்.
- வைத்தியசாலையில் எமது விடுதியில் உள்ள மலசலகூடங்களைச் சுத்தமாகப் பேணுவதற்கு ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- நோயாளிகளான எம்மிலிருந்து நோய் பரவக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதை மனதிற்கொண்டு இன்னொருவர் நோய்த் தாக்கத்துக்கு உட்படுவதைத் தவிர்த்துக்கொள்வதும் எமது கடமையாகும். நாம் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ கைக்குட்டைகளைத் தடுப்பாக பாவிக்கலாம். நுளம்புகள் மூலம் பரவும் நோயுள்ள போது நாம் நுளம்புக்கடியிலிருந்து பாதுகாப்பு பெறுதல் வேண்டும். இதனால் இன்னுமொருவர் நோயைப் பெறுவதைத் தடுத்துக்கொள்ளலாம்.
- வைத்தியர்கள் பரிசோதனை செய்யும் போது எமது முகத்தை எதிர்ப்புறம் திருப்பி வைத்தியர்கள் நோய்த்தொற்றடைவதைத் தடுக்கலாம். இதனால் வைத்தியர்கள் நோய்களைப் பெறுவது தடுக்கப்படுவதால் வைத்தியசாலைப் பணிகளும் இடையறாது நடைபெறும்.
- இன்னுமொரு நோய் எமக்குத் தொற்றலடையக்கூடாது என்பதில் நாம் எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ அதே போல் மற்றவர்களும் எமக்குள்ள நோயினால் பாதிப்பு அடைவதைத் தடுக்கும் மனநிலையை எம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- இவற்றால் நாங்களும், எமது சமுதாயமும் சுகாதாரமானதும், ஆரோக்கியமானதாகவும் மாறலாம் என்பதில் ஐயமில்லை.
எஸ்.ரகுராமன், பி.கலாவேந்தா, வி.செந்தூரன்
மருத்துவ மாணவர்கள் (28 ஆவது பிரிவு)
Posted in கட்டுரைகள்