நீரிழிவு நோய் மற்றும் அதன் சிகிச்சை முறை தொடர்பாக எம்மவர்கள் மத்தியிலே பல தவறான அபிப்பிராயங்கள் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
தவறான கருத்து: நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகளை 40 வயது கடந்த பின்னரே மேற்கொள்ள வேண்டும்.
உண்மை நிலவரம்: நீரிழிவு நோயானது இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இளவயதிலேயே ஏற்படும் அபாயம் அதிகமாகும். எனவே, நீரிழிவு ஏற்படுவதற்கான அபாய அறிகுறி உள்ளவர்கள் (உடல்பருமனாக இருத்தல், நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு நீரிழிவு இருத்தல், நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் இருத்தல்) இளவயதிலேயே நீரிழிவு நோய் இருக்கின்றதா, இல்லையா என்பதைக் கண்டறிந்து கொள்வது அவசியமாகும்.
தவறான கருத்து: நீரிழிவு நோயானது ஒருவருக்கு குணங்குறிகளுடன் மாத்திரமே வெளிப்படுகின்றது.
உண்மை நிலவரம்: நீரிழிவு நோயானது பொதுவாக சிறுநீர் வெளியேறுதல், அடிக்கடி அதிகளவில்தாகம், பசி மற்றும் உடல் மெலிவடைதல் போன்ற குணங்குறிகளுடனேயே வெளிப்படுகிறது. எனினும் நீரிழிவு நோயானது எந்தவொரு அறிகுறிகள் இன்றியும் ஒருவருக்கு ஏற்படலாம். எனவேதான் நீரிழிவு நோய் இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதைப் பரிசோதித்துப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். எமது நாட்டைப் பொறுத்தவரை 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய் இருக்கின்றதா அல்லது இல்லையா எனப்பரிசோதித்துப்பார்ப்பது மிகவும் அவசியமாகும். எனினும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாய அறிகுறிகள் உள்ளவர்களும், நீரிழிவு நோய்க்கான குணங்குறிகள் உள்ளவர்களும் மிக இளவயதிலேயே இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் மாகும்.
தவறான கருத்து: நீரிழிவு நோயானது பணக்காரர்களுக்கே பொதுவாக ஏற்படுகின்ற நோயாகும்.
உண்மை நிலவரம்: உலகளாவிய ரீதியில் 2/3 வீதமான நீரிழிவு நோயாளர்கள் வளர்முக நாடுகளிலேயே காணப்படுகின்றனர். நீரிழிவுநோயானது வர்க்க பேதமின்றி அனைவரையும் தாக்குகின்ற ஒரு நோயாகும்.
தவறான கருத்து நீரிழிவு நோயானது இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதைக் கண்டறிவதை இயன்றவரை பிற்போடு வது நல்லது. நீரிழிவு நோய் இருக்கின்றதா என்பதை ஆரம்பித்திலேயே கண்டறிந்தால் தேவையின்றிப் பல பிரச்சினைகள் ஏற்படுவதோடு மன உழைச்சலும் ஏற்படலாம்.
உண்மை நிலவரம்: நீரிழிவு நோய் ஒருவருக்கு இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொண்டால், அதற்குரிய விதத்தில் உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டு அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதனூடே நீரிழிவால் ஏற்படக் கூடிய நீண்டகாலப்பாதிப்புக்களை தவிர்க்கவோ அல்லது பிற்போடவோ முடியும். நீரிழிவு நோயானது கண்டறிப்படாது உரிய சிகிச்சை வழங்கப்படாதவிடத்து, ‘கண்குருடாதல், சிறுநீரகம் செயலிழந்து போதல், நரம்புத்தொகுதிப்பாதிப்பு மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட நேரிடலாம்.
தவறான கருத்து: நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் “மெற்போமின் குளிசையால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது.
உண்மை நிலவரம்: இது எம்மவரிடையே இருக்கின்ற தவிர்க்கப்பட வேண்டிய தவறான கருத்தாகும். பன்னாட்டளவில் நீரிழிவு நோயாளர் ஒருவருக்கு வழங்கப் படுகின்ற முதல்தர மருந்து “மெற்போ மின்” ஆகும். இது குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்துவ தோடு, உடல் பருமனானவர்களின் உடல் நிறையைக் குறைக்க உதவுகின்றது. ஒருகுறிப்பிட்ட அளவுக்குச் சிறுநீரகத்தின் தொழிற்பாடு குறைந்தவர்களுக்கு மாத்திரம் மெற்போமின் மருந்தின் அளவைக் குறைக்கவோ, நிறுத்தவோ வேண்டி ஏற்படுகின்றது. நீரிழிவு நோயாளியொருவருக்குக் குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
தவறான கருத்து : நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஆங்கில மருந்துகளைத் தவிர்த்து “கசாயம்” போன்ற மருந் துகளை உள்ளெடுப்பதே சிறந்ததாகும்.
உண்மை நிலவரம்: பன்னாட்டளவில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு “ஆங்கில மருந்துகள்” ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டேபயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றோம். அதை இல்லாமல் விரட்டி விடுகிறோம் என்ற பெயரில் பலவிதமான “கசாயங்களும் அங்கீகரிக்கப்படாத மருந்துகளும் சில நீரிழிவு நோயாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. எவ்வளவோ பணத்தைச் செலவழித்துப் பெறப்படும் இவ்வகையான மருந்துகளின் உள்ளடக்கம் என்ன என்பது பற்றியோ, அதனால் எற்படுகின்ற நீண்ட காலப்பாதிப்புகள் என்ன என்பது பற்றியோ ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வில்லை . எனவே நீரிழிவு நோய் தொடர்பாகப் பயிற்சி பெறாத ‘போலி மருத்துவர்களையோ’ அல்லது ‘போலி மருந்துக ளையோ’ உள்ளெடுப்பதைத் தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.
தவறான கருத்து: நீரிழிவு நோயாளர் ஒருவர் ஆட்டா மா, ஓட்ஸ் போன்றவற்றையே அதிகமாக உண்ணவேண்டும்.
உண்மை நிலவரம்: நீரிழிவு நோயாளியொருவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பாக பலவிதமான தப்பபிப்பிராயங்கள் எமது மக்கள் மத்தியில் உள்ளன. நீரிழிவு நோயாளியொருவர் சீனிச் சத்து நிறைந்த உணவுப் பதார்த்தங்களைத் தவிர்த்து, மாச்சத்து அதிகமாக உள்ள உணவுகளைக் குறைத்து உண்பது மிக அவசியமானதாகும். எமது மக்கள் மத்தியில் அரிசி மா, ஆட்டா மா சேர்ந்த உணவு என்றால் எவ்வளவும் உண்ணலாம் என்ற பிழையான எண்ணக் கருத்து உள்ளது. எந்தவொரு மாச்சத்துள்ள உணவையும் குறைவாக உண்பதே நல்லது. நீரிழிவு நோயாளியொருவரின் உணவுத்தட்டில் கால்பங்குக்கு மேற்படாத மாச்சத்தை உள்ளெடுக்க வேண்டும். “ஓட்ஸ்” போன்றவற்றில் நார்த்தன்மை உள்ளபோதிலும் அதிகளவு மாச்சத்தும் காணப்படுகின்றது. எனவே எமக்கு இயற்கையில் கிடைக்கக் கூடிய, மலிவான எவ்வளவோ பிரதியீடான உணவுகள் கிடைக்கின்றன. இது சம்பந்தமான விவரங்களை உங்கள் குடும்ப மருத்துவரிடமிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
தவறான கருத்து: நீரிழிவு நோயாளியொருவருக்கு குருதியில் கொலஸ்ரோலின் அளவு குறைவடையும்போது கொலஸ்ரோல் மருந்தை நிறுத்துவது அவசியமாகும்.
உண்மை நிலவரம்: நீரிழிவு நோயாளியொருவருக்கு மாரடைப்பு மற்றும் பாரிசவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். எனவே நீரிழிவு நோயளியொருவரின் “கொலஸ்ரோல்” அளவைக் கட்டுப்பட்டினுள் வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். 40 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளி யொருவருக்கு “கொலஸ்ரோல் அளவு” சாதாரணமாக இருந்தாலும், கொலஸ்ரோல் மருந்தை உள்ளெடுப்பது அவசிய மாகும். 40வயதுக்குக் குறைந்த நீரிழிவு நோயா ளியொருவருக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையேற்படின் “கொலஸ்ரோல் மருந்தை உள்ளெடுக்க வேண்டியிருக்கும். இது சம்பந்தமான மேலதிக விவரங்களை உங்கள் குடும்ப மருத்துவரிடமிருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
தவறான கருத்து: நீரிழிவு நோயாளியொருவருக்கு “இன்சுலின் ஊசி மருந்து போடுவதை இயன்றளவு தவிர்த்துப் பிற்போடுவது அவசியமாகும்.
உண்மை நிலவரம்: நீரிழிவு ‘வகை-2’ நோயாளருக்கும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் குளிசைமருந்துகள் தொழிற்பட முடியாதநிலமை ஏற்படுகின்றது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு இன்சுலின் மருந்தே மிகவும் அவசியமானதாகும். மேலைத்தேய நாடுகளைப் போன்று, நாமும் இன்சுலின் பயன்பாட்டை உரிய காலத்தில் ஆரம்பித்தால் நீரிழிவால் ஏற்படுகின்ற நீண்டகாலப் பாதிப்புக்களைத் தவிர்க்கவோ அல்லது பிற்போடவோமுடியும். இன்சுலின் மருந்துப் பயன்பாடு மிகவும் இலகுவானதாகும். இது தொடர்பான விளக்கங்களை மருத்துவரிடமிருந்தோ அல்லது தாதியரிடமிருந்தோ பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட பல்வேறு தவறான எண்ணக் கருத்துக்களைக்களைந்து கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை நாம் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கக் கூடியதாக இருக்கும்.
M.அரவிந்தன்
நீரிழிவு, அகஞ்சுரக்கும் தொகுதிசிறப்பு மருத்துவ நிபுணர்,
யாழ்.போதனா மருத்துவமனை.