இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை நாடுமுழுவதும் 22,562 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்சேர்க்கப்பட்டுள்ளார்கள்.இதில் சுமார் 1385 பேர் யாழ்.மாவட்டத்தில் மட்டும்பாதிக்கப்பட்டுள்ளார்கள். திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் 14 பேர் உயிரிழந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டெங்குக் காய்ச்சல் வருடம் முழுவதும் ஏற்பட்டாலும் நவம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையான மாரி காலத்தில்தான் வட பகுதியில் அதிகமாக ஏற்படுகின்றது. மாரி காலத்தில் அதிக நீர்தேங்கும் இடங்களால் ஏற்படும் நுளம்புப் பெருக்கம் இதற்குக்காரணமாகும்.
டெங்குக்காய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது?
ஈடீஸ் (Aedes) எனப்படும் நுளம்பினால் தான் டெங்குக்காய்ச்சல் மனிதர்களில் பரவுகின்றது. டெங்குக் காய்ச்சல் ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுகின்றது. இந்த டெங்கு வைரஸில் 4 வகைகள் உள்ளன. டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே வழி ஈடீஸ் நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகும். இந்த நுளம்பின் இயல்புகளையும் வாழ்க்கை வட்டத்தையும் அறிந்து கொள்வதன் மூலம் இந்த நுளம்பிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஈடீஸ் பெண்நுளம்பு மனிதர்களைப்பெரும்பாலும் பகல் வேளையிலேயே கடிக்கின்றது. அதிலும் குறிப்பாகக் காலையில் சூரியன் உதித்து 2 மணித்தியாலங்கள் வரையும் மாலையில் சூரியன்மறைய2 மணித்தியாலங்களுக்கு முன்பும் கூடுதலாகக் கடிக்கின்றன. எனவே, இந்தநேரங்களில் வெளியில் நடமாட்டத்தைக் குறைப்பதன் மூலமும் உரிய பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வதன் மூலமும் நுளம்பின்தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
இந்த நுளமபானது மனிதர்களின் குடியிருப்புகளுக்கு அண்மையாக குறிப்பாக நககர்ப்புறங்களில் அதிகமாகக்காணப்படுகின்றது. பெண் ஈடீஸ் நுளம்பானது நிலையான சுத்தமான நீர் தேங்கியுள்ள கொள்கலன்களின் உட்புறச்சுவரில் ஒட்டிக் காணப்படுகின்றது. இந்த முட்டைகள் ஓரிருநாட்களில் பொரித்து குடம்பிகளை வெளிவிடுகின்றன. இந்தக் குடம்பிகள் நீரில் அசைந்து திரிந்து சேதனப்பொருள்களை உணவாகக்கொள்கின்றன. 4 தொடக்கம் 5 நாள்களில் இவை கூட்டுப்புழுக்களாகமாறுகின்றன. கூட்டுப்புழுக்கள் உணவுண்பதில்லை. அசைவற்றவை. இவை நுளம்பாக மாற்றமடைய, 2நாள்கள்தேவை. ஆகவே நுளம்பின் வாழ்க்கை வட்டம் பூர்த்தியாக 8 தொடக்கம் 10 நாள்கள் தேவையாக உள்ளது. எனவே ஒரு கிழமைக்கு ஒரு தடவை யாவது நீர்தேங்குமிடங்களில் அல்லது நீர்க்கொள்கலன்களில் உள்ள நீரை மாற்றுவ தன் மூலம் அல்லது வழிந்தோடச்செய்வதன் மூலம் நுளம்புப்பெருக்கத்தைக்கட்டுப்படுத்தலாம்.
ஈடீஸ்நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் எவை?
உங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் வாரம் ஒரு முறையாவது சுற்றிப்பாருங்கள் நுளம்பு பெருகக்கூடியதுய தண்ணிர்நிலையாகத் தேங்கியுள்ள இடங்களை நீங்களே கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும். பழையரயர்கள், யோகட்கப் மீன் அல்லது பிஸ்கட்ரின்கள் போத்தல்கள் பொலிதீன் பைகள், கோப்பைகள், பீங்கான்கள் பூச்சாடிகள், மூடப்படாத தொட்டிகள், பாவிக்கப்படாதகிணறுகள் கைவிடப்பட்ட மீன்தொட்டிகள், பறவைகள் குளிப்பதற்காக அமைக்கப் பட்ட தொட்டிகள் அலங்கார நீரூற்றுக்கள் சிரட்டைகள், மூங்கில்கள் சில அலங்காரத் தாரவங்கள், மரப்பொந்துகள் அடைபட்ட வாய்க்கால்கள், குளிர்சாதனப் பெட்டியின் அடியிலுள்ள நீர்தேங்கும்தட்டு எறும்புகள் ஏறாமல் மேசைக்கால்களுக்கு அடியில் வைக்கப்படும் நீர்நிறைந்த பாத்திரங்கள், மழை நீர்கூரையிலிருந்து வடிந்தோடவைக்கப்படும்பீலிகள் அடைபட்டிருப்பின்,பழைய வாளிகள், கொள்கலன்கள் போன்ற பற்பல பொருள்கள் நீர் தேங்கியிருக்கும் போது ஈடீஸ்நுளம்பு பெருகக்காரணமாகலாம்.
டெங்குக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கிருமி பற்றி சில தகவல்கள்
டெங்கு நோயை ஏற்படுத்தும் டெங்கு வைரஸ்ஆனது நான்கு வகைப்படும். இந்த வைரஸ் தொற்றும் போது இதற்கு எதிராக உடலில் பூரணமான ஏதிர்ப்புச்சக்தி உருவாவதில்லை. முதலாவது தரம் டெங்குக்காய்ச்சல் ஏற்படும்போது கடுமையான பாதிப்பு ஏற்படுவதில்லை. இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது தரம் ஏற்படும்போது
கடுமையான தாக்கம் ஏற்படும் இந்தப்பாதிப்புக்கு உடலின் நிர்ப்பீடனத்தொகுதியின் அதீத செயற்பாடே காரணமாகும்.
ஈடீஸ் நுளம்பானது டெங்கு நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் கடிக்கும் போது நுளம்பினுள் வைரஸ் கிருமிகள் குருதியுடன் செல்கின்றன. வைரஸ்கள் நுளம்பினுள் பெருகி ஒருகிழமையின் பின் இன்னொருவரைக் கடிக்கும் போது அவருக்கு டெங்கு தொற்றிக் கொள்கின்றது.
டெங்கு வைரஸ் தொற்றிய நுளம்பு இடும் முட்டைகளில் இருந்து வெளியேறும் நுளம்புகளும் டெங்கு நோயைப் பரப்புகின்றன. அது மட்டுமல்லாது நுளம்பின் முட்டைகள் பல மாத காலத்துக்கு வறட்யைத்
தாங்கி உயிர் பிழைக்கக்கூடியன. அதாவது இந்த மழைகாலத்தில் இடப்படும் முட்டைகள் அடுத்த மழைகாலத்திலும் பொரிக்கக்கூடிவை. இந்தகாரணங்களால் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவது கடினமாகும்.
டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்தக் கூடிய வழிவகைகள் எவை?
ஈடீஸ் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதே பிரதானமானதாகும் இரண்டாவதாக நுளம்பு கடிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும். நுளம்பு பெருகக்கூடிய இடங்களைக் கட்டுப்படுத்துவதானது சமுதாயத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டியதொன்றாகும்.
நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாவன
- வீட்டு வளவிலுள்ள பழைய ரின்கள் யோகட்கோப்பைகள், பொலிதீன்போன்றவற்றை புதைத்து விடுதல் அல்லது எரித்துவிடுதல்
- வாளிகள், கோப்பைகளைக் கவிழ்த்து வைத்தல்
- அவற்றில் நீர்நிரம்பியிருந்தால்நீரைக் கவிழ்த்து ஊற்றுவது மட்டும்போதாது. அவற்றின் உட்புறச்சுவரில் ஒட்டியுள்ள முட்டைகளைத்துடைத்து அகற்றுதல்
- வாய்க்கால், கூரைப்பீலி என்பவற்றை அடைத்து நீர்தேங்காதுபார்த்துக்கொள்ளுதல்.
- பூச்சாடிகளிலுள்ள நீரை 2 நாளைக்கு ஒரு தடவை மாற்றுதலும் அதன் உட்புறத்தை துடைத்தலும்
- குளிர்சாதனப் பெட்டியில் அடியிலுள்ள தட்டு, Ant trops என்பவற்றிலுள்ள நீரையும் இடைக்கிடை மாற்றுதல், நீரை மாற்ற முடி யாவிட்டால் உப்பு அல்லது சோப்கரசலைச் சேர்த்து விட்டால் நுளம்பு பெருகாது.
- எல்லோரும் தத்தமது வீடுகளையும்காணிகளையும் சுத்தமாகவைத்திருக்க வேண்டும். குப்பைகளை பக்கத்திலுள்ள வெறுங்காணிக்குள் வீச வேண்டாம். நுளம்புகள் ஒரு மைல் தூரம் வரை பறக்கவலவை. எனவே நாம் மற்றவர்களின்காணியில் வீசிய குப்பைகளிலிருந்து பெருகிய நுளம்பு நம்மையே கடிக்கலாம்.
- வீடுகள் மட்டுமன்றி நம் வேலைத்தளம், பிள்ளைகள் செல்லும் பாடசாலை, மேலதிக நேர வகுப்பு போன்றவற்றின் சூழல் பற்றியும் கவனம் செலுத்துங்கள்.
நுளம்பு கடிக்காமல் பாதுகாப்பது எப்படி?
ஈடீஸ் நுளம்புகள் பகலில் கடிப்பதனால் இரவில் நுளம்புவலையைப் பயன்படுத்துவதன் மூலம் பாது காக்க முடியாது. காலையிலும் மாலையிலும் நுளம்புகள் அதிகமாக உள்ள இடங்களைத் தவிருங்கள் கை நீட்டு சேட்களையும் நீண்ட காற்சட்சட்டைகளையும் அணிவதன் மூலம் நுளம்பு கடிப்பதைத் தடுக்கலாம் இறுக்கமான உடைகளை விட தளர்வான உடைகளே சிறந்தவை. வெளியே செல்லும்போது காலுறை, சப்பாத்து அணிவது மேலதிக பாதுகாப்பை அளிக்கும். நுளம்பைவிரட்டும் கிறிம்களையும் எண்ணெய்களையம் உபயோகிக்கலாம்.
டெங்குக்காய்ச்சலின் அறிகுறிகள் எவை?
மனிதர்களில் சில நூற்றுக்கணக்கான வைரஸ்கள் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. இவற்றில் சிலருக்கே டெங்குக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற ஆபத்தான காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. டெங்குக் காய்ச்சல் நோயாளிக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்புறம்நோ தசைநோ. மூட்டு நோ மற்றும் முதுகுநோ போன்றவை ஏற்படும். டெங்கு நோயாளிகள் எல்லோருக்கும் இறப்பு போன்ற பெரிய பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கே இத்தகையதாக்கம் ஏற்படும்.
பாரதூரமான டெங்குக்காய்ச்சலின் அபாய அறிகுறிகள்
தொடர்சியான வாந்தி மூக்கு முரசு போன்றவற்றிலிருந்து இரத்தக்கசிவு, வயிற்றுநோ. மூச்செடுக்க சிரமம், குருதி வாந்தி வயிறு வீங்குதல் தலைச்சுற்று சிறுநீர்குறைவாகப் போதல், அறிவு மயங்குதல் என்பன அபாய அறிகுறிகளாகும்.
காய்ச்சல் ஏற்பட்டஒருவர் என்ன செய்யவேண்டும்
ஆரம்ப நிலைகளில் டெங்குக் காய்ச்சலை சாதாரண வைரஸ் காய்சல்களிலிருந்து வேறுபடுத்தி அறிவது கடினமாகும். காய்ச்சல் ஏற்படும் 3ஆம்நாள் நீங்கள் மருத்துவரை அணுகி FullBlood Count எனப்படும் குருதிச் சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சோதனையில் குருதிச்சிறுதட்டுக்களின் அளவு குறைவடைந்தால் அந்த மருத்துவரின் ஆலோசனையுடன் வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறலாம். உங்களுக்கு மேற்குறிப்பிட்ட அபாய அறிகுறிகள் ஏதுமிருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்குச்செல்லுதல் வேண்டும்.
கர்ப்பிணித்தாய்மார்கள், நீண்டகாலநோய்வாய்பட்டவர்கள் (இருதய சிறுநீரக நுரையீரல்) காய்ச்சல் ஏற்பட்ட முதல்நாளேவைத்தியரிடம் செல்லல் வேண்டும். காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு அதிக நீரிழப்பு ஏற்படும் என்பதால் அதிகளவு நீராகாரங்களை அருந்த வேண்டும். வளர்ந்த ஒருவர்(50kg) 2.5லிற்றர் நீராகாரங்களை ஒரு நாளைக்கு எடுக்க வேண்டும். நீரை விடகஞ்சி, சூப், இளநீர் நெல்லுப்பொரித் தண்ணிர் ஜீவனி போன்றவற்றை அருந்துவது நன்று சிவப்பு அல்லது மண்ணிற குளிர்பானங்களை அருந்த வேண்டாம். இவற்றை அருந்திய பின் வாந்தி எடுத்தால் இரத்த வாந்தி எடுத்தவரா என அறியமுடியாமல் போகலாம்.
வளர்ந்த ஒருவர் காய்ச்சலுக்கும் உடல் நோவுக்கும் பரசித்தமோல் வில்லைகளை 6 மணித்தியாலத்துக்கு ஒருதடவை எடுக்கலாம். இது தவிர Diclofenac lbuprofen போன்ற மாத்திரைகளை எக்காரணத்தைக் கொண்டும் எடுக்காதீர்கள்.
முடிவாக டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது என்பது முழுச்சமுதாயமும் உணர்ந்து செயற்பட்டால் மட்டுமே முடியக் கூடிய செயலாகும். எனவே எமது குழந்தைகளையும் உறவுகளையும் பாதுகாப்போம் என உறுதி பூணுவோமாக.
மருத்துவர்.S.கேதீஸ்வரன்
பொது மருத்துவ நிபுணர்.
யாழ் போதனாவைத்தியசாலை.