2050ஆம் ஆண்டில் டிமென்ஷியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உலகளவில் தற்போது இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகரித்து, பதிமூன்று கோடியை தாண்டிவிடும் என்று ஒரு புதிய கணிப்பு காட்டுகிறது.
முன்னர் இருந்ததை விட தற்போது மக்கள் நீண்ட காலம் வாழ்வதனால் டிமென்ஷியாவின் பாதிப்பும் அதிகரிக்கும் என்றும், இது பொதுசுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு கடுமையான சவால்களை எற்படுத்துவதாகவும், அல்ஸைமர்ஸ் போன்ற மூளை பாதிப்பு நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு உதவிவரும் அல்ஸைமர்ஸ் டிசீஸ் இண்டர்நேஷ்னல் என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது.
டிமென்ஷியாவால் பாதிக்கப்படும் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடிபேராக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
உலகளவில் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுபவர்களைப் பராமரிப்பதற்கான செலவு 800 பில்லியன் டாலர்களையும் தாண்டிவிட்டதாக அந்த அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
நினைவாற்றல் மங்குவது மற்றும் சிந்திக்கும் திறனை இழப்பது உள்ளிட்ட எல்லாவிதமான மூளை அழுகல் நோய்களுக்கும் மொத்தமாக டிமென்ஷியா என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
மூளை அழுகல் நோய்களில் மிகவும் பொதுவாக காணப்படுவது அல்சைமர்ஸ் நோயாகும். மூளை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் அல்சைமர்ஸ் நோயால் அவதிப்படுபவர்கள் என்பது குறிப்பிடதக்கது.