எமது சூழலில் காணப்படும் அனைத்துப் பொருள்களிலும் ஏதொவகையான கிருமிகள் காணப்படுகின்றன. நாம் அவற்றைத் தொட்டு விட்டு உணவு சமைக்கும் போதோ உண்ணும் போதோ அல்லது கிருமித் தொற்றுக்கு ஆளாகக் கூடிய பச்சிளங் குழந்தைகளைத் தொடும் போதோ கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.
மேலும் தற்போதுள்ள இன்புளுவென்சா வைரசு தொற்றுக்கு தொடுகையும் ஒரு காரணமாகும். எனவே கிருமித் தொற்றுக்களிலிருந்து நம்மையும், எமது பச்சிளங்குழந்தைகளையும் பாதுகாக்க நாம் கைக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பாதுகாப்பு முறை வினைத்திறனுள்ள கை கழுவுதல் ( Effective Hand washing) ஆகும். அதற்காக எமக்கு அதிக நேரமோ அல்லது செலவோ ஏற்படாது. எமக்குத் தேவையானவை சவர்க்காரம் போன்றவையும் சுத்தமான நீரும் தான் அதற்காக நாம் எடுக்கும் நேரமும் ஒரு நிமிடத்திலும் குறைவே. எனவே அனைவரும் வினைத்திறனான முறையில் கைகளைக் கழுவி கிருமித் தொற்றிலிருந்து எம்மையும் பிறரையம் பாதுகாக்கலாம். சாதாரண அல்லது கிருமி கொல்லி சவர்க்காரத்தைக் கைகளில் பூசி நுரை உண்டாகும் வரை உரசிய பின்னர்
- ஒரு வட்டவடிவில் உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று உரசுங்கள்.
- கை விரல் இடுக்குகளுக்கு இடையில் கையின் வெளிப்பக்கமாக இரண்டு கைகளிலும் தேய்க்கவும்.
- பின்னர் விரல் இடுக்குகளுக்கு இடையில் உள்ளங்கைகளைத் தேய்க்கவும்.
- ஒரு சைட் விரல்களால் மறு கையின் விரல்களின் வெளிப் பக்கங்களை மாறி மாறி உரசுங்கள்.
- இரண்டு பெருவிரல்களையும் நன்றாக உரசவும்.
- இரண்டு உள்ளங்கைகளிலும் விரல் நுனிகளைத் தேய்க்கவும்.
- இரு மணிக்கட்டு பகுதிகளையும் சுற்றித் தேய்க்கவும்.
மேற்கூறிய முறையில் கைகளை உரசி பின்னர் சுத்தமான நீரில் கைகளைக் கழுவி, தூய்மையான துவாயினால் துடைக்கவும், கைகளில் வெளிப்படையாக அழுக்கு இல்லாவிடில் நீரையோ சவர்க்காரத்தையோ பயன்படுத்தாமல் மதுசாரம் ( Alcohol) கலந்து கைக் கிருமி நீக்கியை ( Alcohol Hand Gel) பயன்படுத்தி மேற் கூறிய படிமுறைகளில் பூசித்தேய்த்து காற்றில் உலர விடுவதன் மூலம் கைகளைத் தூய்மைப் படுத்த முடியும். இந்த மதுசாரம் கைக்கிருமி நீக்கிகள் சற்று விலை அதிகமாயினும் மருந்தகங்களிலும், சுப்பர் மார்க்கெட்டுகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ்.போதனா வைத்தியசாலை.