எமது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளில் கூடியளவு அசைவுக்கு உட்படுவது கழுத்து ஆகும். எமது உடல் அவயவங்களுக்கும் மூல காரணியான மூளைக்கும் இடையில் அமைந்துள்ள தொடர்புபடுத்தும் அங்கம் கழுத்து ஆகும். இதில் ஏற்படுகின்ற வலி வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கின்றது. கழுத்துவலி என்பது சாதாரணமாக தட்டிக்கழிக்க கூடியாதொரு விடயமல்ல, ஏனேனில் மூளையிலிருந்து வருகின்ற நரம்புத் தொகுதியின் நரம்புத் திரட்டுகளும் இதயத்திலிருந்து மூளைக்கும் மற்றைய அவயவங்களுக்கும் குருதியைக் கொண்டு செல்கின்ற இரத்தக் குழாய்களும் ஒருங்கமைந்துள்ளமையால் அவற்றில் ஏற்படுகின்ற பாதிப்புக்களும் கழுத்து வலியாக வெளிப்படுத்தப்படலாம்.
கழுத்துப் பகுதியிலுள்ள எலும்புகளின் அதிர்ச்சிகள் பிரயோகிக்கப்படுதலாலோ அன்றி அடிபடுதல் விழுதல், பாரங்கள் தலையில் விழல் போன்ற செயற்பாடுகளினாலோ கழுத்து முள்ளந்தண்டு எலும்பில் ஏற்படுகின்ற பாதிப்புக்களால் கழுத்துவலி ஏற்படலாம். இதனைச் சாதாரண கழுத்து வலி என்றோ சுளுக்கு என்றோ கருதி அலட்சியப்படுத்தலாகாது. மேலும் கழுத்து எலும்பு தேய்மானங்களினாலும், நரம்புகள் நசுக்கப்படுவதாலும் கழுத்துவலி அதிகரிக்கலாம். இத்தகைய நிலைமைகளில் வைத்திய ஆலோசனைகளையும் கழுத்து எலும்புகளுக்குரிய அசைவு குறைக்கப்படுதலும் அவசியமாகும். இந்தக் கழுத்துவலி நிலைமை நாளடைவில் தோள்பட்டை வலி, கைவலி, தலைவலி போன்ற நிலைமைகளுக்கும் இட்டுச் செல்லும். கழுத்து வலிக்குரிய காரணத்தை அறிவதற்கு தற்காலத்திலே பல நடைமுறைகள் நோய் நிதான பரிசோதனைகள் காணப்படுகின்றன. நவீன உபகரணங்கள் மூலம் எழும்பு நரம்புகள் போன்றவற்றை அறிந்து நோய் நிலையை அறியக்கூடியதாக உள்ளது.
பாரம்பரிய முறையிலான சுளுக்கு எடுத்தல், மசாஜ் செய்தல் என்பன தவிர்க்கப்படல் வேண்டும்.
சாய்மனைக் கதிரைகளில் தூங்குவது, உடற்தொழிலியில் செயற்பாடுகளுக்கு முரணானது. கழுத்து முள்ளெலும்புகள் அதிக அழுத்தத்தைப் பெறுகின்றன. இதனால் கழுத்து வலி ஏற்படலாம். தலையில் அதிக பாரம் சுமப்பது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மேலும் படுத்திருந்த படி கழுத்தைக் கூடிய மடிப்புக்கு உள்ளாக்கி மேல் நோக்கிப் பார்த்தால் அதாவது தொலைக்காட்சி பார்த்தல் நாளடைவில் இந்த நிலைக்கு இட்டுச் செல்லும் மேலும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் படுக்கையின் போது உயரம் குறைந்த தலையணைப் பயன்படுத்த வேண்டும். கழுத்துத் தசையைப் பலப்படுத்தும் அப்பியாசங்களை மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். மற்றும் கழுத்துக்கு அசைவை மட்டுப்படுத்துகின்ற உபகரணங்களை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம் மற்றும் கழுத்துக்கு அசைவை மட்டுப்படுத்துகின்ற உபகரணங்களை மருத்துவ ஆலோசனையுடன் உபயோகிக்கலாம். மற்றும் பார்வைழி தொழில் நுட்ப உபகரணங்களை பாவிக்கும் போது கண்ணுக்குப் பாதிப்பில்லாமல் கழுத்து மடிப்பு அளவுக்கும் பாதிப்பில்லாமல் 20 வீதம் தாழ்வாக வைத்து பாவித்தல் நல்லது. கூடியபட்சம் அண்ணாந்த நிலையில் (கழுத்து மடிப்பு 90 வீதத்திலும் கூடிய) வேலைகள் செய்வதைத் தவிர்த்தல் நல்லது. எனவே கழுத்துவலி ஏற்படும் வேளை சரியான மருத்துவ ஆலோசனையைப் பெற்று நலமோடு வாழ்வோம்.
எஸ். பத்மநிருபன்
தாதிய உத்தியோகத்தர்.
(சத்திரசிகிச்சைப் பிரிவு)
யாழ் போதனா வைத்தியசாலை.