Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    February 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728  
    « Jan    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



அங்கவீனத்தை ஏற்படுத்தும் தொற்றுநோய்

உடலில் ஊனத்தை ஏற்படுத்தி,இன்னொருவரில் சார்ந்து வாழும் நிலையை ஏற்படுத்தும் நோய்களில் தொழுநோயும் ஒன்றாகும். இது பரம்பரை நோயல்ல. இது ஒரு தொற்று நோயாகும். நோயாளி தும்மும் போதும் இருமும் போதும் சிந்தும் சிறுதுளிகளினால் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு பரம்புகின்றது. இதன் நோயரும்பு காலம் 3-5 வருடங்கள் வரைநீண்டு காணப்படலாம். இது எல்லா வயதினரையும் ஆண், பெண் இரு பாலினரையும் தாக்கக் கூடியது. பெரும்பாலும் பொருளாதார வளம் குன்றிய குடும்பத்தினரே இலகுவில் பாதிப்புறுகின்றனர். தோல் மற்றும் நரம்புகளையே இந்த நோய் முதன்மையாகத் தாக்குகின்றது.

தொழுநோய்க்கு சிகிச்சை உள்ளது

முன்னைய காலங்களில் குஷ்டரோகம் என அழைக்கப்பட்டதும் இந்த நோயே. இந்த நோயை ஆரம்ப நிலையிலே இனங்கண்டு அதற்கான சிகிச்சையை பெறுபவர் பூரண குணமடையலாம். அங்கவீனம் அடைவதனையும் தவிர்த் துக்கொள்ளலாம். இந்த நோய் முற்றாக குணப்படுத்தக் கூடிய நோயே. அசண்டையீனமாக கவனிக்காதிருப்போமானால் இந்த நோய்ப் பாதிப்பு அதிகரித்து நிரந்தர அங்கவீனமுறும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடும்.  இந்த நோயை குணப்படுத்தக்கூடிய மருந்து வகைகள் இங்கு யாழ்ப்பாணத்தில் கிடைக்கக் கூடியதாக உள்ளன.  குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் தோல் நோய் சிகிச்சைப் பிரிவில் அவற்றை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் விசேடம் என்னவெனில் ஒருநாள் மாத்திரை எடுத்தாலே இதன் தொற்றும் தன்மை இல்லாது போவதுடன் அங்கவீ னமுறும் துர்ப்பாக்கியமும் இல்லாது போகின்றமையாகும்.

யாழ்ப்பாணத்தில் ஒரு குறிப்பட்ட பிரதேசத்தில் மட்டுமே இந்த நோயாளிகள் ஆரம்பத்தில் இனங்காணப்பட்டனர். ஆனால் இன்று அவ்வாறில்லாமல் இந்த நோய்த்தாக்கம் பரவலாக காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது. குருநகர், நாவாந்துறை போன்ற பகுதிகளில் அதிக நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.  இந்த நோயாளிகள் வேறோர் நோய்க்கு சிகிச்சை பெறச்செல்லும் போது விபத்தாகவே இந்த நோய் இனங்காணப்பட்டுள்ளது. எனவே எம் மத்தியில் தமக்கு இந்த நோய் தொற்றியுள்ளது என அறியாது இந்த நோயுடன் வாழ்வோரின் எண்ணிக்கை இதுவரை இனங்காணப்பட்டோரிலும் அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை நாம் அனைவரும் அறிந்திருத்தல் அவசியமாகின்றது. குறிப்பாக மக்களுடன் நேரடியாக அவர்களின் சூழலில் தொடர்புற்று சேவை வழங்கும் உத்தியோகஸ்தர்கள் இந்த நோயின் அறிகுறிகளைத் தெரிந்திருப் பின் அவர்களை வழிப்படுத்தி சிகிச்சைக்குட்படுத்தி அவர்களின் வாழ்வு நிலை கீழ்நோக்கி வீழும் அபாயநிலையை தடுத்திட முடியும். சிகிச்சைக்குட்பட்டவர்கள் தொடர்ந்தும் மாத்திரைகளை உள்ளெடுத்து வருகின்றமையை உறுதி செய்து கொள்ளவும் முடியும். இவ்வாறு செய்யின் இந்த நோய் சமூகத்துக்கு மேலும் பரம்பலுறுவதை தடுத்திட முடி யும். இந்த நோய்க்கான மாத்திரைகளை பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை பாவித்துவரின் பூரண குணம் கிடைக் கும்.

அறிகுறிகள்

இந்த நோயின் குணம்குறிகளை பார்ப்போமானால் தோலில் ஏற்படும் தேமல் போன்ற அடையாளங்களாகவோ தளும்புகளாகவோ தோன்றும். இவை வெளிறிய நிறமாகவோ சிவப்பு நிறமாகவோ அல்லது செங்கபில நிறமாகவோ காணப்படும். இவற்றில் கடி, சொறித் தன்மை இருக்காது. இவற்றில் உணர்வுத்தன்மை குறைவாகவோ அல்லது முற்றாக இல்லாதாகவோ காணப்படும். குறிப்பாக நோவு, தொடுகை, சூடு அல்லது வெக்கையை உணரும் தன்மை இருக்காது. இவ்வடையாளங்களில் உரோமங்களும் வியர்வைச்சுரப்பிகளும் கூடக் காணப்பட மாட்டா. இவற்றைவிட தோலில் சிறுசிறு கட்டிகளும் மினுமினுப்பான தடித்த தன்மையும் சிலரில் காணப்படலாம்.

நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களை பார்ப்போமானால் தடிப்படைந்த நரம்புகள், மணிக்கட்டு சோர்வடைதல், விரல்களை நீட்ட முடியாமை, பாதத்தை நிமிர்ந்த முடியாமை அல்லது பாதம் சோர்வடைதல், விறைப்புறுதல் காரணமாக பாதம் அடிக்கடி பொருள்களுடன் மோதுண்டு மாறாத புண்கள் ஏற்படும். கண்களை முழுமையாக மூட முடியாமை இதனால் பிறபொருள்கள் கண்களினுள் விழுந்து கண்கள் சிவப்புறுதல், வீங்குதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். கவனிக்காது விடுவோமெனில் பார்வையிழப்பு ஏற்படும்.

சாதாரணமாக தேமலுக்குப் பூசப்படும் பூச்சு மருந்துகளுக்கு இந்த தோல் பாதிப்புக்கள் குணமடையமாட்டா. எனவே மேற்சொன்ன ஏதேனும் ஓர் அறிகுறியாவது இருப்பின் அருகிலுள்ள வைத்தியரிடமோ அல்லது தோல் சிகிச்சை நிலையத்துக்கோ சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ளுதல் நன்று.

அவதானம் அவசியம்

கால், கைகளில் விறைப்புத் தன்மை கொண்ட நோயாளிகளுக்குக் காயங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். இது மீள முடியாத அங்கக் குறைபாடு களைக் காலப்போக்கில் ஏற்படுத்திவிடும்.  எனவே அங்கங்களை பாதுகாக்கும் முயற்சியில் கவனம் செலுத்துதல் வேண்டும். சூடான பொருள்களையோ கூரான ஆயுதங்களையோ கையாளும் போது பாதுகாப்பான அங்கிகளை அணிந்து கொள்ளுதல், பொருத்தமான பாதணிகளை அணிந்துகொள்ளுதல், வீட்டிலிருந்து வெளிக்கிளம்பும் போது பாதுகாப்பு கண் – கண்ணாடிகளை அணிந்துகொள்ளுதல், நித்திரை செய்யும் போதும் கண் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற தடுப்பு முறைகளில் கவனம் செலுத்துதல் நன்று. 

இருமும் போது தும்மும் போதும் கைக்குட்டைகளை பாவித்தல் பொது இடங்களில் கண்டபடி துப்புவதைத் தவிர்த்தல் போன்ற பழக்கங்கள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கும் நோய் பரம்புவதை தடுத்திடமுடியும்.

மருந்துப் பாவனைக் காலத்தில் தோல் நிறம் கருமையடைதல், சிறுநீர் சிவப்பு நிறமாக மாறுதல் என்பன போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். சிகிச்சை நிறைவில் இவை பழைய நிலைக்கு திரும்பும். சிகிச்சைக் காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுவகைகளை தவிர்த்தல் நன்று. இந்த நோய்க்கான பரிசோதனையை குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் செய்து கொள்ள வேண் டும். தமக்கு நோய் தொற்று ஏற்பட வில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும்.

சிகிச்சை பெற்றுவரும் நோயாளியைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய தில்லை . அவர்களுக்கான சமூக அந்தஸ்தையும் மரியாதையும் பறித்தல் கூடாது. சிகிச்சை பெற்றுக் கொள்வதனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நோயாளிகளுக்குப் பிரதேச செயலக – சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாதந்தோறும் உதவிப் பணக்கொடுப்பனவு ஒன்றும் வழங்கப்படுகின்றது.

வைத்தியர் பொ.ஜெசிதரன்,
சுகாதார வைத்திய அதிகாரி,
மாநகர சபை, யாழ்ப்பாணம்

Posted in கட்டுரைகள்
« மருத்துவரைச் சந்திக்கும் பொழுது
ஆரோக்கியம் தரும் சூரிய ஒளி »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com