நீரிலுள்ள இரசாயன உள்ளடக்கத்தைப் பொறுத்து, நீரானது வன்னீர், மென்னீர் என வகைப்படுத்தப்படுகிறது. இவற்றில் வன்னீரானது சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது. கல்சியம், மக்னீசியம் போன்ற கனிமங்களை அதிகளவில் கொண்ட நீரே வன்னீராகும். தீவுப் பகுதிகளிலுள்ள கிணற்று நீரானது சாதாரண கிணற்று நீரிலும் பார்க்க மிகவும் வன்மையானது. இது கொதிக்க வைப்பதால் அகற்ற முடியாது. ஆனால் சாதாரண கிணற்று நீர் வன்மையானது கொதிக்க வைப்பதால் அகற்றப்படக் கூடியது. இந்த நிலையில் தீவுப்பகுதி மக்கள் அதிகளவில் சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.
நைதரசன் கொண்ட வீட்டுக்கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வளமாக்கிகள் காரணமாக நீரில் நைத்திரேற்று அயன்களின் (NO3) அளவு அதிகரிக்கின்றது. நைத்திரேற்று அயன்கள் பற்றீரியாக்களின் தொழிற்பாடு காரணமாக நைத்திரைற்றுக்களாக தாழ்த்தப்படுகின்றன. நைத்திரேற்று (NO3) அயன்கள் உடலில் ஒட்சிசனைக் குருதிகாவும் ஈமோகுளோயிட்டுடன் (Hb) சேரும்போது ஈமோகுளோபினது ஒட்சிசன் காவும் அளவு குறைகின்றது. இது குழந்தைகளில் மிகவும் ஆபத்தான மெதிமோகுளோபினீமியா ( Methemoglobinemia) எனும் நிலையை தோற்றுவிக்கிறது.
இந்த நைத்திரேற்று அயன்களானது உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியான நைத்திரோசமைமனை உருவாக்குகிறது. மனிதர்களுக்கு ஆபத்தான இத்தகைய நைத்திரேற்று செறிவாக்கலானது யாழ்பாண நீர் நிலைகளில் அதிகளவில் நடைபெறுவது கவனத்திற்குரியது.
தொழிற்சாலைக் கழிவுகள் பீடை கொல்லிகளால் நீர்நிலைகளில் சேரும் பார உலோகங்களும் எண்ணெய்க் கசிவுகளால் சேரும் பெற்றோலிய சேதன இரசாயனங்களும் பல்வேறு வகையான புற்றுநோய்களையும் வேறுசில நோய் நிலைமைகளையும் ஏற்படுத்தவல்லன.
அசேதன இரசமானது (Hg) மீனினூடாக மனிதனை அடைந்து நரம்புத் தொகுதியை பாதிப்பதோடு நிறமூர்த்தங்களின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் புற்று நோயையும் உண்டாக்குகிறது.
(As) ஆசனிக் செறிவூட்டப்பட்ட நீரை அருந்துவதால் ஆசனிக்கு நஞ்சாதல் ஏற்படுகிறது. இதனால் தோல், சிறுநீர்ப்பை, சிறுநீரக நுரையீரல் புற்றுநோய்களை ஏற்படுத்துவதுடன் குருதிக்குழாய் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன.
ஈய (Pb) நஞ்சாதலால் நரம்பு மற்றும் இனப்பெருக்க தொகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்படும். ஈய நஞ்சாதல் சிறுவர்களையே அதிகம் பாதிக்கிறது. இதனால் சிறுவர்களின் கற்றல் மற்றும் வளர்ச்சிக்குறைபாடு, வலிப்பு இவற்றோடு இளவயது மரணமும் சம்பவிக்கலாம்.
நீரில் அதிகளவில் புளோரைட்டு அயன்கள் காணப்படுவதால் பல், என்பு பிரச்சினைகள் ஏற்படுத்துவதுடன் அவற்றின் கட்டமைப்பையும் சேதமாக்குகிறது. அஸ்பெஸ்ரஸ் நீரில் சேரும்போது குடற்புற்றுநோயை ஏற்படுத்துகின்றது.
பெற்றோலிய இரசாயனப் பதார்த்தங்களான, மெதனோல் ( Methanol) பார்வைக் கோளாறுகளையும், பென்சீன் (Benzene) இதயம் தொடர்பான நோய்களையும், நப்தலின் ( Napthalene) சுவாசப்பாதைத் தொற்றையும், டீசல் ( Diesel) தோல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
நீர் மாசடைதலால் ஏற்படும் இப்பாரதூரமான விளைவுகள் எம்மில் பலரால் பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் நீர் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர். அத்துடன் பாதுகாப்பான நீரின்றி எட்டு செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறக்கிறது.
நகர்ப்புறக் கழிவுகள், நீர் நிலைகளை அடையவிடாது அகற்றபடுவதற்கு கான்தொகுதி இணைப்புக்களை உருவாக்குதல், தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளை அடையவிடாது தடுத்து தொழிற்சாலை, வைத்திய சாலைகளில் தொற்றுநீக்கும் தாங்கிகளை அமைத்தல், வளமாக்கி போன்ற விவசாய இரசாயனப் பொருள்களின் பாவனையைக் கட்டுப்படுத்தல் மற்றும் எண்ணெய், பெற்றோலிய பொருள்கள் நீரில் கலப்பதைத் தடுத்தல் போன்ற வழிமுறைகளால் நீர் மாசடைதலை இழிவளவாக்குவதன் மூலம் நீர் தொடர்பான நோய்களையும் குறைக்கலாம். நீர் மாசடைதல் தொடர்பான பிரச்சினைகள், நீரின் முக்கியத்துவம், நீர்மாசடைதலால் ஏற்படும் நோய்கள் என்பன தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் மக்கள் மத்தியில் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட தடுப்புமுறைகளானவை பெரிய அளவில் திட்டமிட்டு செய்யப்படவேண்டியவை. ஆனால் தனிமனிதர்களாக நாம் நீர் மாசடைதலின் விளைவுகளை உணர்ந்து நீர்வளத்தை அசுத்தமாக்காது விரயமாக்காது கொதித்தாறிய வடிகட்டிய நீரைக் குடிப்பதன் மூலமும் மழை நீரைக் குடிப்பதன் மூலமும் மழை நீரைக் குடிதண்ணீராக பயன்படுத்துவதன் மூலமும், எம் ஆரோக்கியத்தை பேணுவதுடன் எம்மைச் சூழவுள்ள சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பேணலாம்.
எம்.எம்.ஜேம்ஸ், வி.அருநாத், செல்வி மதுபாசினி
மருத்துவபீட மாணவர்கள்.